Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

குப்பையில்லா நகரமாக்க விழிப்புணர்வு தேவை

Print PDF

தினமணி     31.05.2010

குப்பையில்லா நகரமாக்க விழிப்புணர்வு தேவை

திருச்சி, மே 30: திருச்சி மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற பெண்கள் நல அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த முன்வர வேண்டும் என்றார் மேயர் எஸ். சுஜாதா.

திருச்சியில் அனைத்து பெண்கள் சங்கங்கள், ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஐ..எஸ். தேர்வில் வெற்றி பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்ற திருச்சியைச் சேர்ந்த ஆர். லலிதாவுக்கான பாராட்டு விழாவில் அவர் பேசியது:

"திருச்சியைச் சேர்ந்தவர்கள் சாதனை படைப்பது பெருமைக்குரியது. முன்பு கேரளம், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் திருச்சிக்கு வந்து படித்தனர். தற்போது, திருச்சியைச் சேர்ந்தவர்கள் மற்ற பகுதிக்குச் சென்று படிக்கின்றனர். இந்தச் சூழ்நிலையில், லலிதா சாதனை படைத்திருப்பது மகிழ்ச்சிக்குரியது.

திருச்சியை மேம்படுத்த பெண்கள் நல அமைப்புகள் முன்வர வேண்டும். இந்த மாநகரை குப்பையில்லா நகரமாக மாற்ற பெண்கள் நல அமைப்புகள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார் சுஜாதா.

பின்னர், ஆர். லலிதா ஏற்புரையில் பேசியது:

"இந்த வெற்றிக்குப் பெற்றோரே காரணம். அவர்கள் அளித்த ஊக்கத்தால்தான் இந்த வெற்றியைப் பெற முடிந்தது. நம்முடைய கனவுகள் நிறைவேறாமல் போவதற்கு மற்றவர்கள் நம்மை அலட்சியமாகப் பேசுவதே காரணம். நம்மைப் புறக்கணிக்கும் வகையில் பேசுவோர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளக் கூடாது.

இந்தத் தடைகளைத் தாண்டி வர வேண்டுமானால், பெற்றோரின் ஆதரவு நிச்சயம் தேவை. தாய், தந்தையால் முடியாதது எதுவும் இல்லை. அவர்கள் நினைத்தால் நாம் முன்னேற்றமடைய முடியும்' என்றார் லலிதா. இதில் ஸ்ரீமதி இந்திரா காந்தி கல்லூரி முதல்வர் கே. மீனா, ஜம்பகா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

குடிநீரில் கழிவு நீர் கலப்பு: சரிப்படுத்திய ஊழியர்கள்

Print PDF

தினமணி    31.05.2010

குடிநீரில் கழிவு நீர் கலப்பு: சரிப்படுத்திய ஊழியர்கள்


சிவகங்கை, மே 30: சிவகங்கை காந்தி வீதியில் குடிநீரில் சாக்கடைக் கழிவுநீர் கலந்ததை அறிந்த ஊழியர்கள் அதைச் சரிசெய்தனர். காந்தி வீதி-ஆசிரியர் சோமசுந்தரம் தெரு சந்திப்பில் சாக்கடைக் கழிவு நீர் செல்வதற்கான பாலம் அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக சாக்கடை நீர் கலந்து குடிநீரில் வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானது. இந் நிலையில், நகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் ஏற்பாட்டின்பேரில், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அந்த இடத்திலிருந்து கழிவுநீரை அகற்றிவிட்டு குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்தனர். இதன்பிறகு குடிநீர் வழக்கம்போல் தூய்மையாகக் கிடைத்து வருகிறது என அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.

 

அனுமதியற்ற மாடறுப்பு மனைகளால் சுகாதாரக்கேடு:அகற்ற மேலப்பாளையம் மக்கள் மாநகராட்சிக்கு மனு

Print PDF

தினகரன்   31.05.2010

அனுமதியற்ற மாடறுப்பு மனைகளால் சுகாதாரக்கேடு:அகற்ற மேலப்பாளையம் மக்கள் மாநகராட்சிக்கு மனு

திருநெல்வேலி:மேலப்பாளையத்தில் அனுமதியற்ற மாடறுப்பு மனைகளை அகற்றி சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவேண்டும் என நேருஜி ரோடு பொதுமக்கள் மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சிக்கு மேலப்பாளையம் நேருஜி ரோடு மக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:நெல்லை மாநகராட்சி மேலப்பாளையம் வார்டு நேருஜி ரோட்டில் அனுமதி பெறாத மாடறுப்பு மனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

நூற்றுக் கணக்கான மாடுகளை தினந்தோறும் லாரிகளில் மூலம் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டு வந்து நள்ளிரவில் இறக்குகின்றனர். மாடுகளில் அலறல் சத்தத்தினால் வீடுகளில் குடியிருப்போர் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தினந்தோறும் ஏராளமான மாடுகளை அறுப்பதன் மூலம் வெளியாகும் ரத்தம், குடல் கழிவு, சாணம் ஆகியவை திறந்தவெளி சாக்கடையில் தேங்கி நிற்பதால் துர்நாற்றமும், கொடிய நோய் கிருமிகளை பரவக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.நூற்றுக் கணக்கான மாடுகளை ஒரே இடத்தில் குவித்து வைத்திருப்பதால் ஒருவிதமான பூச்சி போன்ற வண்டுகளின் தொந்தரவுகள் அதிகமாக உள்ளன. மாட்டு சாணத்தை குவியலாக சேர்த்து வைப்பதால் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகியுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சியில் புகார் செய்த போது குடியிருப்பு பகுதியில் மாடுகள் அறுப்பதற்கு அனுமதியில்லை என எழுத்து பூர்வமாக பதில் தந்துள்ளனர். ஆனால் அதை காலி செய்வதற்கு ஆக்கப் பூர்வமான எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாடறுப்பு மனைகளை நடத்துவோர் பண பலமும், ஆள் பலமும் மிக்கவர்களாக இருப்பதால் அவர்களை எதிர்த்து போராடும் சக்தி மக்களிடம் இல்லை. மாநகராட்சியில் புகார் செய்தால் மிரட்டுகின்றனர். மக்களுக்கு சுகாதாரக் கேடு ஏற்படுவதை தடுக்கவும், மாடறுப்பு மனைகளை நடத்துவோரின் மிரட்டல்களில் இருந்து பாதுகாப்பு அளிக்கவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 


Page 239 of 519