தினமலர் 20.11.2013
டெங்கு தடுக்க மாநகராட்சி ஆலோசனை
திருச்சி: மழை காலத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.
இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:
மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தடுக்க ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம், நல்வாழ்வு குறித்த சில விழிப்புணர்வு செய்திகளை பரப்பி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் குடிநீரை கொதிக்கவைத்து நன்கு வடிகட்டி ஆறவைத்து குடிக்க வேண்டும்.
வீட்டின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் தேங்காய் மூடிகள், டயர்கள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியும்.
திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க வேண்டும். குப்பைகளை, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை மழைநீர் வடிகாலிலோ அல்லது சாக்கடைகளிலோ தேங்காதவகையில் இருக்க உதவ வேண்டும்.
இது குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மாநகர மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்று நடந்து, மழை காலத்தில் ஏற்படும் நோய் தாக்கத்தை குறைத்து நலமுடன் வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேலும் சுகாதாரம் தொடர்பான புகார்களை 76395 33000, 76395 66000 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.