Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

டெங்கு தடுக்க மாநகராட்சி ஆலோசனை

Print PDF

தினமலர்         20.11.2013 

டெங்கு தடுக்க மாநகராட்சி ஆலோசனை

திருச்சி: மழை காலத்தில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த நீர் தேங்கும் பொருட்களை அப்புறப்படுத்துமாறு மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:

மழைக்காலங்களில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களை தடுக்க ஏதுவாக மாநகராட்சி நிர்வாகம், நல்வாழ்வு குறித்த சில விழிப்புணர்வு செய்திகளை பரப்பி வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் குடிநீரை கொதிக்கவைத்து நன்கு வடிகட்டி ஆறவைத்து குடிக்க வேண்டும்.

வீட்டின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் தேங்காய் மூடிகள், டயர்கள், பிளாஸ்டிக் கப்கள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்த வேண்டும். இதன் மூலம் டெங்கு கொசு உற்பத்தியை தடுத்து டெங்கு காய்ச்சல் வருவதை தவிர்க்க முடியும்.

திறந்த வெளியில் மலம் கழிப்பதை தடுக்க வேண்டும். குப்பைகளை, குறிப்பாக பிளாஸ்டிக் கழிவுகளை மழைநீர் வடிகாலிலோ அல்லது சாக்கடைகளிலோ தேங்காதவகையில் இருக்க உதவ வேண்டும்.

இது குறித்த விழிப்புணர்வு வீதி நாடகங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. எனவே மாநகர மக்கள் இந்த அறிவுரைகளை ஏற்று நடந்து, மழை காலத்தில் ஏற்படும் நோய் தாக்கத்தை குறைத்து நலமுடன் வாழ கேட்டுக் கொள்ளப்படுகிறது.

மேலும் சுகாதாரம் தொடர்பான புகார்களை 76395 33000, 76395 66000 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மாநகராட்சி கமிஷனர் பெருமிதம் கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடி

Print PDF

தினமலர்         20.11.2013 

மாநகராட்சி கமிஷனர் பெருமிதம் கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடி

திருச்சி: ""பொது கழிப்பிட பராமரிப்பில் திருச்சி முன்னோடியாக திகழ்கிறது,'' என, மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி கூறினார்.

திருச்சி மாநகராட்சி சார்பில் உலக கழிவறை தின நாள் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி மைய அலுவலக வளாகத்தில் நடந்த இந்த விழாவுக்கு மேயர் ஜெயா தலைமை வகித்தார்.

விழாவுக்கு முன்னிலை வகித்த மாநகராட்சி கமிஷனர் தண்டபாணி பேசியதாவது:

ஆண்டுதோறும் நவம்பர் 19ம் தேதி உலக கழிவறை தினமாக கொண்டாடப்படுகிறது. திருச்சி மாநகராட்சியில் 286 குடிசைப் பகுதிகள் உள்ளன. 4 ஆயிரத்து 643 இருக்கைகள் கொண்ட, 383 பொது கழிப்பிடங்கள் உள்ளன.

இவற்றில், கடந்த 2008ம் ஆண்டு முதல் கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் அலைகள் மகளிர் குழு சார்பில் 67, ஸ்கோப் சார்பில் 28, சேவை சார்பில் 42, என மொத்தம் 137 பொது கழிப்பிடங்கள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சமுதாயம் சார்ந்த கழிப்பிட பராமரிப்பில் திருச்சி மாநகராட்சி முன்னோடியாக உள்ளது.

உலக கழிப்பறை தினத்தை முன்னிட்டு, 76 மாநகராட்சி பள்ளிகள், தனியார் பள்ளிகளில் கழிப்பிட பயன்பாடு, பராமரிப்பின் அவசியம் குறித்த விழப்புணர்வு துண்டு பிரசுரங்கள், திறந்த வெளி கழிப்பிடங்களை புறக்கணித்தல் குறித்த போஸ்டர்கள் வழங்கப்பட்டு, பள்ளி துவங்கும் முன் உறுதி மொழி ஏற்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

கிராமாலயா நிறுவனர் தாமோதரன் பேசுகையில், ""மிக சுகாதாரமான நாடாக விளங்கும் சிங்கப்பூரில் தான் முதன்முதலாக 2001ம் ஆண்டு உலக கழிப்பறை தின அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஒரு காலத்தில் திருச்சியில் இருந்து குஜராத், வார்தா போன்ற பகுதிகளுக்கு சென்று கழிப்பிட பராமரிப்பு, அமைத்தல் குறித்து பார்வையிட்டு திரும்பிய நிலை மாறி, தற்போது உலக அளவில் இருந்து திருச்சியில் உள்ள கழிப்பிட வசதிகளை பார்வையிடும் நிலை உருவாகியுள்ளது,'' என்றார்.

விழாவில், சிறப்பாக கழிப்பிடங்களை பராமரித்த கிராமாலயா அலைகள் குழுவை சேர்ந்த 12 குழுக்களுக்கு பரிசுகளை மேயர் ஜெயா வழங்கி, கிராமாலயா இணைதளத்தையும் துவக்கி வைத்தார்.

விழாவில், துணை மேயர் ஆசிக் மீரா மற்றும் கோட்டத் தலைவர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிருங்கள்

Print PDF

தினமலர்         20.11.2013 

திறந்தவெளியில் மலம் கழிப்பதை தவிருங்கள்

திருப்பூர் :நவ., 19ம் தேதி, உலக கழிப்பறை தினமாக கருதப்படுகிறது; அந்நாளில், கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

பெரிச்சிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில், உலக கழிப்பறை தின விழா நேற்று நடந்தது. பள்ளி வளாகத்தில் இருந்த கழிப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டன. அதன்பின், கழிப்பறையை தூய்மையாக பராமரிப்பது குறித்து கருத்தரங்கு நடந்தது. மாநகராட்சி நான்காவது மண்டல உதவி கமிஷனர் செல்வநாயகம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ஞானாம்பாள் வரவேற்றார். நகர்நல அலுவலர் செல்வக்குமார் பேசுகையில்,"" திறந்தவெளியில் மலம் கழிப்பதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.

வயிற்றுபோக்கு, காலரா, டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் பரவுகின்றன. கழிப்பறையை தூய்மையாக பராமரிக்க வேண்டும். கழிப்பறையை பயன்படுத்திய பின், கை மற்றும் கால்களை சோப்பு போட்டு கழுவ வேண்டும். வாரம் ஒருமுறை நகம் நறுக்க வேண்டும். ""மாதம் ஒருமுறை முடித்திருத்தம் செய்துகொள்ள வேண்டும். கால்களில், காலணி அணியாமல் வெளியிடங்களுக்கு செல்லக்கூடாது,'' என்றார்.ஆசிரியர் கனகராஜா நன்றி கூறினார்.விழிப்புணர்வு ஊர்வலம் திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள கழிப்பிடங்கள் நேற்று சுத்தம் செய்யப்பட்டு, பொதுமக்களிடம் உலக கழிப்பிட தின விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கழிப்பிட பயன்பாடு மற்றும் சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், விழிப்புணர்வு ஊர்வலம் நேற்று நடந்தது.மூன்றாவது மண்டல அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலத்தை, இரண்டாவது மண்டல தலைவர் ஜான் துவக்கி வைத்தார். நகர் நல அலுவலர் செல்வக்குமார், மாநகர பொறியாளர் ரவி, உதவி கமிஷனர்கள் கண்ணன், செல்வநாயகம் உட்பட அதிகாரிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். விழிப்புணர்வு தட்டிகளை கையில் ஏந்தியபடி, நல்லூர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவியர் சென்றனர். மண்டல அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம், காங்கயம் மெயின் ரோட்டில் ராக்கியாபாளையம் பிரிவு வரை சென்றது. அதன்பின், பொது மக்களுக்கு விழிப்புணர்வு துண்டுபிரசுரம் வினியோகிக்கப்பட்டது.

 


Page 25 of 519