தினமலர் 24.05.2010
ஈரோடு நகரில் காலாவதி பொருட்கள் அழிப்பு
ஈரோடு: ஈரோடு மாநகராட்சி பகுதியில், 1030 கிலோ, எடையுள்ள காலாவதி பொருட்கள் கைப்பற்றப்பட்டதாக மாநகராட்சி கமிஷனர் பாலசந்திரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
ஈரோடு மாநகராட்சி பகுதியில் காலாவதியான மற்றும் தயாரிப்பு தேதி குறிப்பிடப்படாத உணவுப்பொருட்களை கைப்பற்றி அழிக்கும் நடவடிக்கை தொடர்கிறது. சென்ற 21ம் தேதி காலை முதல் மதியம் வரை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பிரப் சாலை, நேதாஜி சாலை, ஆர்.கே.வி., சாலை, மணிக்கூண்டு, புதுமஜித் வீதி, தியேட்டர் கேன்டின்கள், மரப்பாலம் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு நடத்தப்பட்டது. அழுகிய பழங்கள், காலாவதியான பழச்சாறு வகைகள், குளிர் பானங்கள், பால் பாக்கெட்டுகள், குடிநீர் கேன்கள், குடிநீர் பாக்கெட்டுகள், குழந்தைகளுக்கான மிட்டாய்கள், இனிப்பு, கார வகைகள், ஐஸ்கிரீம் வகைகள் மற்றும் மாவு பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டன. 77 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1,030 கிலோ எடையுள்ள பொருட்கள் கைப்பற்றப்பட்டன. காலாவதி பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதுபோன்ற திடீர் ஆய்வுகள் மாநகர பகுதிகள் முழுவதும் நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.