தினமணி 14.05.2010
ரூ.1 லட்சம் காலாவதி உணவுப் பொருள்கள் அழிப்பு
ஈரோடு, மே 13: ஈரோட்டில் பல்வேறு கடைகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட, ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதிப் பொருள்கள் அழிக்கப்பட்டன.
ஈரோடு மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதன், வியாழக்கிழமைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. மாநகராட்சிக்கு உள்பட்ட ஹோட்டல்கள், கடைகளில் ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி சுகாதாரத்துறை அலுவலர்கள், காலாவதியான உணவுப் பொருள்கள், குளிர்பானங்கள் என சுமார் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்களைக் கைப்பற்றினர். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள், வெண்டிபாளையத்தில் புதைக்கப்பட்டன.
தொடர்ந்து இதுபோன்ற சோதனைகள் நடத்தப்பட்டு, காலாவதியான உணவுப் பொருள்கள் பறிமுதல் செய்யப்படும். காலாவதியான உணவுப் பொருள்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.