தினமலர் 06.05.2010
சூப்பர் மார்க்கெட்டுகளில் காலாவதியான உணவு பறிமுதல் : குடந்தையில் அதிகாரிகள் அதிரடி
கும்பகோணம் : கும்பகோணத்தில் 4 சூப்பர் மார்க்கெட்டுகளில் ரூ.1 லட்சம் மதிப்பிலான காலாவதியான உணவு பொருட்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்ததை நகராட்சி அலுவலர்கள் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.காலாவதியான மருந்து மாத்திரைகளை தொடர்ந்து உணவுப் பொருட்களையும் சோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து நேற்று கும்பகோணம் நகராட்சி ஆணையர் பூங்கொடி, நகர்நல அலுவலர் சுப்ரமணியன் ஆகியோர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
தஞ்சை மெயின் சாலையில் உள்ள 4 சூப்பர் மார்க் கெட்டுகளில் இச்சோதனை நடந்ததால் பரபரப்பு ஏற் பட்டது. இந்த கடைகளில் சோதனையிட்ட போது கடந்த 2009ம் ஆண்டே காலாவதியான 'ஹால்ஸ்', 2008ல் காலாவதியான மைதா, கோதுமை, ரவா, அப்பளம், 2009ல் காலாவதியான குழந்தைகள் விரும்பி உண்ணும் முன்னணி நிறுவனங்களின் பிஸ்கட்கள்.
வெளிநாட்டு கம்பெனிகளின் பெயரிலான டின்களில் அடைக்கப்பட்ட உயர் ரக குளிர்பானங்கள், பல தரப்பட்ட பேரீட்சம் பழங் கள், திராட்சை, அத்தி போன்ற உலர்ரக பழ வகைகள், சமையல் எண்ணை, சேமியா, நெய், புழுத்துபோன பருப்பு வகைகள், மாவாகிப்போன கொண்டக்கடலை போன்றவற்றை இச்சோதனையின் போது நகராட்சியினர் பறிமுதல் செய்தனர். இவற்றின் மொத்த மதிப்பு ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் என கணக் கிடப்பட்டுள்ளது.
இதுபற்றி நகராட்சி ஆணையர் பூங்கொடி கூறியதாவது: தினமும் அதிக மக்கள் வந்து வாங்கிச் செல்லும் சூப்பர் மார்க்கெட்களில் இதுபோல 2 ஆண்டுகளுக்கு முன்பே காலாவதியான உணவு பொருட்கள் இருந்தது வேதனையாக உள்ளது. முதல் முறையாக கைப்பற்றியதால் விற்பனையாளர்களை எச்சரித்து உள்ளோம்.
இதுபோன்ற நடவடிக்கை தொடரும். இனிமேல் இதுபோல் விற்பவர்கள் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பல பொருட்களில் உற்பத்தி மற்றும் காலாவதியாகும் தேதி, மாதம், வருடங்கள் இல்லை. அதுபோன்ற பொருட்களும் கைப்பற் றப் பட்டுள்ளது.
கலப்படம் உள்ளதா என கண்டறியும் வகையில் 48 பொருட்கள் 'சாம்பிள்' எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்படும். ஊறுகாயில் கலப்படம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பொருட்களை வாங்கும் மக்கள் காலாவதியான தேதியை பார்த்து வாங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.