Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

தண்ணீர் பாக்கெட் தடை சாத்தியமா?

Print PDF

தினமணி 05.05.2010

தண்ணீர் பாக்கெட் தடை சாத்தியமா?

சென்னை, மே 4: சென்னையில் பாலிதீன் பாக்கெட்களில் அடைத்து குடிநீர் மற்றும் மோர் விற்கப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய தமிழக அரசின் அனுமதி கோரும் தீர்மானம் மாநகராட்சியின் கடந்த மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் பாக்கெட்களில் குடிநீர் விற்கப்படுவதை முற்றிலுமாக தடை செய்வதுசாத்தியமா என்பது குறித்து பல்வேறு கேள்விகளை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர்.

பஸ்களிலும், ரயில்களிலும் நீண்டதூரப் பயணம் செல்லும் பொது மக்கள் ஓரளவுக்கு மட்டுமே வீட்டிலிருந்து குடிநீரை எடுத்துச் செல்ல முடிகிறது. அவ்வாறு எடுத்துச் செல்லப்படும் குடிநீர் தீர்ந்துவிடும் பட்சத்தில், எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் எளிதாக இருப்பதால் பாக்கெட் குடிநீரை மக்கள் அதிக அளவு பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், பஸ் நிலையங்கள் உள்ளிட்ட இடங்களில் தொட்டிகளில் வைக்கப்படும் குடிநீரின் தரமும், அவை பராமரிக்கப்படும் விதமும் சரியாக இல்லாததும் பாக்கெட் குடிநீரை மக்கள் அதிகம் நாடுவதற்கு ஒரு காரணம்.

மக்கள் கூடும் பொது இடங்களிலும், குடிசைவாழ் பகுதிகளிலும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்வதில் நமது உள்ளாட்சி அமைப்புகள் தோல்வி அடைந்ததே இதற்கு உண்மையான காரணம் என்பதில் ஐயமில்லை.

அரசின் விதிமுறைகளை உரிய விதத்தில் கடைப்பிடிக்காமல் குறைந்த முதலீட்டில் அதிக லாபம் ஈட்ட நினைப்பவர்களுக்கும், இது சாதகமான ஒன்றாக இருப்பது கடந்த சில ஆண்டுகளில் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

இதையடுத்து, பாலிதீன் பாக்கெட்களில் அடைத்து குடிநீர், மோர் விற்கப்படுவதை முற்றிலுமாக தடை செய்ய அரசின் அனுமதிக்கு பரிந்துரைக்கும் தீர்மானம் சென்னை மாநகராட்சியில் கடந்த 29-ம் தேதி நடைபெற்ற மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

ஆனால், 10 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் பாக்கெட்கள் விற்பனைக்கு வரத் தொடங்கிய சமயத்தில் பொது இடங்களிலும், குடிசைப் பகுதிகளிலும் மக்களுக்கு சுத்தமான குடிநீர் இலவசமாக கிடைப்பதில் இருந்த சூழலுக்கும் தற்போதை நிலைக்கும் எந்தவித பெரிய மாற்றமும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை.

தண்ணீர் பாக்கெட்கள் தடை செய்யப்பட்டால், பொது இடங்களில் கூடும் மக்களும், குடிசைப் பகுதி மக்களும் குறைந்த செலவிலான தண்ணீர் தேவைக்கு என்ன செய்வார்கள்?.

இதற்கு மாநகராட்சியின் நடவடிக்கை என்னவாக இருக்கும்? என்பதே சமூக ஆர்வலர்கள் மத்தியில் இப்போது எழுந்துள்ள கேள்வி.

பஸ் நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுத்தமான தரமான குடிநீர் விநியோகத்தை உறுதி செய்ய மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், தண்ணீர் பாக்கெட்களுக்கான அரசின் தர விதிமுறைகள் அமலாக்கத்தை உறுதி செய்ய மாநகராட்சியின் சுகாதாரத்துறையின் நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட வேண்டும். இதைவிடுத்து, ஒட்டுமொத்தமாக பாக்கெட் குடிநீரை தடை செய்வது என்பது பிரச்னைக்கு தீர்வாக அமையாது என்பதே பலரது கருத்தாக உள்ளது.

மாநகராட்சி நிர்வாகம் எடுக்கும் இத்தகைய நடவடிக்கைகள் தேவை என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

அதே சமயத்தில் தண்ணீர் பாக்கெட்களுக்கு மாற்றாக பொது இடங்களில், குடிநீர் எளிதில் கிடைக்க என்ன வழி? என குடியிருப்போர் சங்கங்கள் கூட்டமைப்பின் நிர்வாகியும், சமூக ஆர்வலருமான பி. விஸ்வநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ரயில்களிலும், ரயில் நிலையங்களிலும் பயணிகளுக்கு குறைந்த விலையில் தரமான குடிநீரை வழங்க "ரயில் நீர்' என்ற பெயரில் ரயில்வே துறை மேற்கொண்டுள்ளத் திட்டம் போல சென்னையில் குறைந்த விலையில், தரமான குடிநீர் கிடைக்க மாநகராட்சியும், குடிநீர் வழங்கல் வாரியமும் இணைந்து புதியத் திட்டத்தை வகுத்து செயல்படுóத்தலாம்.

இத்தகைய திட்டத்தை தொடங்கி செயல்படுத்துவதன் மூலம்தான் தனியார் நிறுவனங்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு அனுப்பும் தண்ணீர் பாக்கெட்களை முற்றிலுமாக தடை செய்ய முடியும் என பல்வேறு சமூக ஆர்வலர்களும், நுகர்வோர் அமைப்புகளும் வலியுறுத்தியுள்ளன.

மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து பேசி இந்த விஷயத்தில் மாற்றுத் திட்டத்தை உடனடியாக உருவாக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கை.

Last Updated on Wednesday, 05 May 2010 10:07
 

மதுரையில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட புதுச்சேரி கல்லூரி மாணவர் சாவு எதிரொலி: ஹோட்டல் அதிபர் உள்ளிட்ட 2 பேர் கைது

Print PDF

தினமணி 05.05.2010

மதுரையில் கெட்டுப்போன உணவைச் சாப்பிட்ட புதுச்சேரி கல்லூரி மாணவர் சாவு எதிரொலி: ஹோட்டல் அதிபர் உள்ளிட்ட 2 பேர் கைது

மதுரை, மே 4: மதுரையில் ஹோட்டலில் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட நிலையில் புதுச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர் உயிரிழந்தார். இதையடுத்து ஹோட்டல் அதிபர் உள்ளிட்ட 2 பேரை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். மூன்று கடைகளுக்குச் "சீல்' வைக்கப்பட்டது.

புதுச்சேரி நல்லவாடு தில்லையம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ஜெயேந்திரன் மகன் இசையமுதன் (21). தீ பாதுகாப்பு குறித்த படிப்பை கடலூர் பகுதி பொறியியல் கல்லூரியில் படித்து வந்தார்.

தீயணைப்பு குறித்த நேரடி பயிற்சிக்காக மாணவர்கள் இசையமுதன் மற்றும் அகிலன், முருகவேல், அருண் ஆகியோர் மதுரை வந்தனர். அவர்கள் கடந்த 1-ம் தேதி மதுரை ரயில் நிலையம் எதிரே உள்ள சிவபார்வதி சைவ உணவகத்தில் பொங்கல், இட்லி சாப்பிட்டனர்.

இந்த நிலையில் அனைவருக்கும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் கடந்த 2-ம் தேதி சிகிச்சைக்கு சேர்ந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி இசையமுதன் இறந்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கவேல் வழக்குப் பதிந்துள்ளார். மாணவர் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் ஒரு வாரத்தில் வரும்.

எனினும் கெட்டுப்போன உணவை சாப்பிட்ட நிலையில்தான் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு இசையமுதன் இறந்திருக்கலாம் என மருத்துவ வட்டாரங்கள் கூறியுள்ளன.

இதையடுத்து சம்பந்தப்பட்ட ஹோட்டல் அதிபர் சுப்பையா, ஊழியர் ஜெயசீலன் ஆகியோரை திடீர்நகர் போலீஸôர் கைது செய்தனர்.

அவர்கள் மீது இந்திய தண்டனை சட்டப் பிரிவு 273 கெட்டுப்போன உணவுப் பண்டங்களை பணத்துக்காக விற்பனை செய்வது, 304 (ஏ) அஜாக்கிரதையாக உள்நோக்கமின்றி மரணத்தை விளைவிப்பது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறைக்காவலுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு போலீஸôர், வருவாய்த் துறை அதிகாரிகள், மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சீலிட்டு நடவடிக்கை எடுத்தனர். இது தவிர மேலும் இரு கடைகளுக்கும் சீல் வைக்கப்பட்டது.

 

பூக்கடைக்கான லைசென்ஸ் ஹோட்டலுக்குப் பயன்பாடு சாலையோர உணவகங்களால் சுகாதாரச் சீர்கேடு!

Print PDF

தினமணி 05.05.2010

பூக்கடைக்கான லைசென்ஸ் ஹோட்டலுக்குப் பயன்பாடு சாலையோர உணவகங்களால் சுகாதாரச் சீர்கேடு!

மதுரை, மே 4: மதுரையில் பூக்கடை நடத்த லைசென்ஸ் பெற்றுவிட்டு ஹோட்டல் போன்ற உணவகங்களைப் பலர் நடத்தியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சுகாதாரமற்ற சாலையோர உணவகங்களால் உடல் நலம் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

மதுரை மாநகராட்சியில் ஆயிரத்துக்கும் அதிகமான உணவு விடுதிகள் உள்ளன. இவை நடுத்தர மற்றும் சிறிய உணவகங்களாகும். மேலும், இரவு நேரங்களில் சாலையோரங்களில் 500-க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கான லைசென்ஸ் ஆண்டுதோறும் புதுப்பிக்கப்படுகிறது. குறிப்பிட்ட தேதிக்கு 45 நாள்களுக்கு முன்பே லைசென்ஸýக்கான பணத்தை மாநகராட்சி கருவூலத்தில் கட்ட வேண்டும்.

அவ்வாறு கட்டிய பணத்துக்கான ரசீதின்படி வார்டு சுகாதார ஆய்வாளர் உணவகத்தை அவை விதிப்படி அமைக்கப்பட்டிருக்கிறதா? என ஆய்வு செய்வார். ஆய்வின் அறிக்கைப்படி உணவகங்களுக்கான லைசென்ஸ் அளிக்கப்படுகிறது.

ஆனால், மதுரையில் அதிகாரிகள் இந்த நடைமுறையை ஓழுங்காகப் பின்பற்றுவதில்லை. முறையாக ஆய்வும் செய்வதில்லை. இதனால், பூக்கடை உள்ளிட்டவற்றுக்கு லைசென்ஸ் பெற்றவர்கள் கூட உணவகங்களை நடத்தும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் சிறிய உணவகங்களில் உணவைத் தயாரிக்கும் இடம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதையும், அதை பரிமாறும் நபர் சுகாதாரத்தைக் கடைப்பிடிப்பதில்லை என்பதையும் காணமுடிகிறது. சிறிய ஹோட்டல்கள் பலவற்றில் கைகழுவும் தண்ணீரே குடிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

மதுரைக்கு நாள்தோறும் வரும் வெளியூரைச் சேர்ந்த நடுத்தர மக்கள் இத்தகைய உணவகங்களில்தான் சாப்பிடும் கட்டாயத்தில் உள்ளனர். அவ்வாறு சாப்பிடுவோர் வயிற்றுப்போக்கு, வாந்தி உள்ளிட்ட பிரச்னைக்கு ஆளாகி சிகிச்சையும் எடுத்துக்கொள்கின்றனர்.

ஆனால், உணவகத்தில் சாப்பிட்டதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து யாரிடம் புகார் அளிப்பது என்பது தெரியவில்லை. அப்படியே தெரிந்திருந்தாலும் விசாரணைக்கு அழைப்பார்களோ எனப் பயந்து புகார் கொடுக்க முன்வருவதில்லை.

நகரில் இரவு நேரத்தில் உள்ள சாலையோர உணவகங்களால் பாதையோரத்திலும் சுகாதாரச் சீர்கேடு ஏற்படுகிறது. பெரியார் பஸ் நிலையம், மாட்டுத்தாவணி பஸ் நிலையம், ஆரப்பாளையம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் உள்ள உணவகங்கள் பெரும்பாலும் சுகாதாரமற்ற முறையிலேயே செயல்படுகின்றன.

இதுபோன்ற கடையில் உணவருந்திய நிலையில்தான் புதுச்சேரி பொறியியல் கல்லூரி மாணவர் இசையமுதன் இறந்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட வழங்கல் அலுவலர் முருகையா, போலீஸ் உதவி கமிஷனர் கணேசன், ஆர்.டி.ஓ. சுகுமாறன், உணவு ஆய்வாளர்கள் சரவணன், ராஜா, ஜெகதீசன் உள்ளிட்டோர் உணவகங்களுக்கு சீல் வைத்தனர்.

மதுரை ரயில் நிலையம் முன் 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10-க்கும் மேற்பட்ட உணவகங்களில் உணவு மாதிரி எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

சோதனை முடிவுகள் வந்தபிறகு குறிப்பிட்ட கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரி சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கோரிக்கை: மாநகராட்சி காங்கிரஸ் கவுன்சிலர்கள் குழுத் தலைவரான கவுன்சிலர் சுப்புராமன் கூறுகையில், சுகாதாரமற்ற முறையில் செயல்படும் உணவகங்களில் அதிகாரிகள் ஆய்வு செய்து தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

 


Page 275 of 519