தினமணி 05.05.2010
கார்பைட் மூலம் பழங்கள் பழுக்க வைக்கப்படுவதாகப் புகார் வாழை மண்டிகளில் அதிகாரி திடீர் சோதனை
வேலூர், மே 4: வேலூர் மாநகராட்சிப் பகுதியில் வாழை மண்டிகளில் செவ்வாய்க்கிழமை திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் கார்பைட் கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட வாழைப் பழங்கள் அப்புறப்படுத்தப்பட்டன.
வேலூர் மாநகராட்சி நகர் நல அலுவலர் பிரியம்வதா தலைமையில், உணவு கட்டுப்பாடு அலுவலர் ஏ.கெüரிசுந்தர், சுகாதார ஆய்வாளர்கள் முருகேசன், லூர்துசாமி, ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை காலை ஆபிசர்ஸ் லைன், இன்பேன்ட்ரி சாலை, தோட்டப்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள 7 வாழை மண்டிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
பொதுமக்களிடம் வந்த புகாரின் அடிப்படையில் இச் சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதில் தோட்டப்பாளையம் பகுதியில் உள்ள 3 மண்டிகளில் கார்பைட் கற்கள் மூலம் வாழைப் பழங்கள் பழுக்க வைக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
இதுதொடர்பாக அந்த மண்டி உரிமையாளர்கள் மூவர் மீதும் வழக்கு தொடர நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர்நல அலுவலர் பிரியம்வதா தெரிவித்தார்.
பிற்பகல் மீன்மார்க்கெட் அருகில் உள்ள 4 கடைகளில் சோதனை நடத்தினர். இதில் முறைகேடுகள் எதுவும் கண்டறியப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இச்சோதனை மேலும் தொடரும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.