தினமலர் 28.04.2010
மன நோயாளிகளுக்கு உதவி: மாநகராட்சி திட்டம்
சென்னை: சாலை ஓரங்களில் சுற்றித் திரியும் மன நோயாளிகளை பாதுகாக்க, மாநகராட்சி சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சென்னை மாநகராட்சியில் 10 மண்டலங்களிலும் சாலைகள், நடைபாதைகளில் எந்தவித ஆதரவும், பாதுகாப்பும் இல்லாத நிலையில் பல மனநோயாளிகள் படுத்து உறங்கியும், சுற்றித் திரிந்தும் வருகின்றனர். சென்னை மாநகராட்சி பொதுத் துறை சார்பில் இதுபோல் மன நலம் குன்றி சாலைகளில் திரிபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முடி திருத்தி, உடல் சுத்தம் செய்து, புத்தாடை மற்றும் சிறப்பு சிகிச்சை வழங்கப்படும்.பொதுமக்கள் அளிக்கும் தகவலின் பேரில் மன நோயாளிகளைக் கண்டறிந்து, அவர்களை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். தொற்று மருத்துவமனையில் சேர்த்த பின், மன நல ஆற்றுப்படுத்துனர்கள் ஆலோசனை பெற்று மன நல மருத்துவ, காவல் துறை மற்றும் நீதித் துறை சான்று பெற்று, சம்பந்தப்பட்டவர் மன நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும். பாதிக்கப்பட்டவர் நல்வாழ்வு பெறும் வகையில் சிறப்பான கண்காணிப்பு மேற்கொள்ளப்படும்.
இதுபோல் மன நலம் குன்றி, சாலைகளில் சுற்றித் திரிபவர்கள் பற்றி சென்னை மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் குகாநந் தத்துக்கு மொபைலில் 9445190744 என்ற எண் ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவித்தால், உடனே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மன நோயாளியை மருத்துவமனையில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, அந்தந்த மண்டல உதவி சுகாதார அதிகாரிகளுக்கும் மொபைல் எண்கள் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்.