தினமணி 26.04.2010
ஆற்றில் அழகர் இறங்கும் வைபவம் பக்தர்களுக்கு அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்படும்
மதுரை, ஏப். 25: அழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தைக் காணவரும் பக்தர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட உள்ளது என்று மதுரை மாநகராட்சி ஆணையர் எஸ்.செபாஸ்டின் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியது:
மதுரையில் சித்திரை திருவிழாவுக்காக அழகர் ஆற்றில் இரங்கும் நிகழ்ச்சிக்கு விழாவிற்கு முன்னதாக வைகை ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்படும். ஆனால் இந்த ஆண்டில் போதிய மழை இல்லாத நிலையில் அணையில் 30 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது.
அணையில் குடிநீர் பயன்பாட்டுக்காக உள்ளதால், தண்ணீர் திறப்பு இல்லை. எனினும் பக்தர்களின் வசதிக்காக மாநகராட்சி மூலம் அனைத்து ஏற்பாடுகளும் தாற்காலிகமாக செய்து தரப்பட உள்ளது.
பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் 100 சின்டெக்ஸ் குடிநீர்த் தொட்டிகள் அமைக்கப்படும். முக்கியமான இடங்களில் ஆம்புலன்ஸ் வசதியுடன் 20 இடங்களில் மருத்துவக் குழுவினர் மூலம் சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் துப்பரவுப் பணிகளை செய்வதற்கு 400 பேர் தாற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் முக்கிய இடங்களில் நடமாடும் கழிப்பறைகளும் அமைக்கப்பட உள்ளாதாக ஆணையர் தெரிவித்தார்.