Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Public Health / Sanitation

கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் : நகராட்சி ஆணையர் தகவல்

Print PDF

தினமலர் 09.04.2010

கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் : நகராட்சி ஆணையர் தகவல்

திருவாரூர் : திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதாரத்துறை அலுவலர்கள் மேற்கொண்ட ஆய்வில் அயோடின் இல்லாத உப்பு மற்றும் கலப்பட தேயிலைத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் சரவணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சுகாதார அலுவலர் தலைமையில் உணவு ஆய்வாளர் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட குழுவினர் உணவு பொருட்கள் உற்பத்தி, சேமிப்பு, விற்பனை ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டு 27 உணவு மாதிரி எடுத்தனர். இதில் 2 தேயிலை உணவு மாதிரிகள், 2 பசும்பால் உணவு மாதிரி, வெல்லம் உணவு மாதிரி கலப்படமானது என்று அறிக்கை கிடைத்துள்ளது. இதையடுத்து கலப்பட உணவுப் பொருட்களை தயார் செய்பவர்கள், விற்பனையாளர்கள், ஏஜன்சியினர் ஆகியோர் மீது வழக்கு தொடர குற்றப்பத்திரிகை தயார் செய்யப்பட்டு உணவு கலப்பட தடுப்புப்பிரிவு சென்னை இணை இயக்குனருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அயோடின் இல்லாத உப்பு 2 ஆயிரத்து 400 கிலோ, கலப்பட தேயிலைத்தூள் 253 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் நகரில் வியாபாரிகள் கலப்படமான உணவுப் பொருட்கள் தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Last Updated on Friday, 09 April 2010 08:34
 

காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்: கூடலூர் நகரில் அதிகாரிகள் அதிரடி

Print PDF

தினமலர் 09.04.2010

காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல்: கூடலூர் நகரில் அதிகாரிகள் அதிரடி

கூடலூர்: கூடலூர் பகுதியில், மாவட்ட வருவாய் துறை மற்றும் சுகாதாரத் துறையினர் நடத்திய திடீர் ஆய்வில், காலாவதியான பொருட்கள், வாகனங்களுக்கு காஸ் நிரப்ப பயன்படும் மோட்டார் பறிமுதல் செய்யப்பட்டது. கூடலூர் பகுதியிலுள்ள கடைகளில், காலாவதியான உணவுப் பொருட்கள், மருந்துகள் விற்பனை செய்வதாகவும், அனுமதியின்றி காஸ் சிலிண்டர் பயன்படுத்தி ஆட்டோ இயக்குவதாகவும் வருவாய் துறைக்கு தகவல் கிடைத்தது. மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவின் படி, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் தலைமையில், கூடலூர் ஆர்.டி.., ஹரிகிருஷ்ணன், சுகாதாரத் துறை துணை இயக்குர் நேர்முக உதவியாளர் ராஜசேகர், கூடலூர் வட்ட வழங்கல் அலுவலர் (பொ) ராஜேந்திரன், மோட்டார் வாகன ஆய்வாளர், நெலாக்கோட்டை வட்டார ஆரம்ப சுகாதார ஆய்வாளர் ரவி, ஓவேலி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் மோகன், கூடலூர் நகராட்சி ஆய்வாளர் கக்கமல்லன், வருவாய் ஆய்வாளர்கள் கந்தசாமி, ராமசாமி, ரமேஷ் அடங்கிய குழுவினர், நேற்று கூடலூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.

குழுவினர் மூன்று பிரிவாக ஆய்வு மேற்கொண்டனர்; ஆய்வில், மளிகைக் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள், குழந்தைகளுக்கான உணவுப் பொருட்கள், மருந்துகள் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். அனுமதியின்றி காஸ் சிலிண்டர் பயன்படுத்தி இயக்கிய இரண்டு ஆட்டோக்கள், 8 சிலிண்டர்கள், புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே கோர்ட் சாலையில், இரு வீடுகளில் விற்பனைக்கு வைத்திருந்த 73 லிட்டர் கெரசினை பறிமுதல் செய்தனர்.

துப்புக்குட்டி பேட்டை கல்குவாரி பகுதி வீட்டில், சமையலுக்கு பயன்படுத்தும் சிலிண்டரிலிருந்து, வாகன சிலிண்டருக்கு காஸ் நிரப்பும் மோட்டார் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. முதுமலை தெப்பக்காடு பகுதியில் கர்நாடகாவுக்கு கடத்தயிருந்த 200 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்தனர். காலாவதியான மளிகைப் பொருட்கள் வைத்திருந்தது தொடர்பாக 2,000, பொது இடத்தில் புகைத்தது தொடர்பாக 400 ரூபாய் அபராதம் விதித்தனர். ''அதிரடி நடவடிக்கை தொடரும்,'' என, மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் சம்பத் தெரிவித்தார்.

Last Updated on Friday, 09 April 2010 08:28
 

அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமலர் 09.04.2010

அயோடின் கலக்காத உப்பு பாக்கெட்டுகள் பறிமுதல்

வேதாரண்யம் : வேதாரண்யம் பகுதியில் அயோடின் கலக்காமல் விற்பனை அனுப்ப வைக்கப்பட்டிருந்த உப்பு பாக்கெட்டுகளை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
உணவில் அயோடின் கலந்த உப்பை பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது. இதனால் கடைகளில் அயோடின் கலந்த உப்பு பாக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உப்பு உற்பத்திக்கு தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்து பெயர் பெற்று விளங்கும் வேதாரண்யத்தில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நேற்று உப்பு உற்பத்தி செய்யப்படும் அகஸ்தியன்பள்ளி பகுதியில் நாகை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வைரமணி தலைமையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த உப்பு பாக்கெட்டுகளை சோதனை செய்ததில் அயோடின் கலக்காமல் இருப்பதும், ஆனால் அதன்மீது அயோடின் கலந்த உப்பு என்று லேபிள்களை ஒட்டி இருப்பதையும் கண்டறிந்து அவற்றை சுகாதாரத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து வேதாரண்யம் நகராட்சித் தலைவர் மீனாட்சிசுந்தரம் கூறுகையில், வேதாரண்யம் பகுதியில் அயோடின் கலந்த உப்பை விற்பனை செய்ய வேண்டும் என அரசு உத்தரவுப்படி அறிவிப்பு செய்துள்ளோம். மேலும் ஒரு கிலோ அயோடின் கலந்த உப்பு தயாரிக்க 5 பைசா தான் செலவாகும். எனவே அயோடின் கலக்காமல் விற்பனைக்கு ஏற்றப்படும் உப்பு மற்றும் லாரிகள் பறிமுதல் செய்யப்படும். இதுகுறித்து நகராட்சி ஆய்வாளர்களும் பரிசோதனை செய்வர் என்றார்.

சுகாதாரத்துறை துணை இயக்குனர் வைரமணி கூறுகையில், கலெக்டர் உத்தரவின் பேரில் அயோடின் கலந்த உப்பு விற்பனை குறித்து கண்காணிக்க தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். விதி மீறல்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
சோதனையின் போது உணவுத்துறை ஆய்வாளர் கோதண்டபாணி, நகராட்சி ஆய்வாளர் பிச்சைமுத்து, சுகாதாரத்துறை ஆய்வாளர்கள் மீனாட்சிசுந்தரம், அழகிரிசாமி மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். மேலும் பெட்டிக்கடைகளில் சுகாதாரத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குழந்தைகளின் உடலுக்கு தீமை விளைவிக்கும் சீன நாட்டின் மிட்டாய்களையும் பறிமுதல் செய்தனர்.

Last Updated on Friday, 09 April 2010 08:24
 


Page 298 of 519