தினமலர் 01.04.2010
அனைத்து வார்டுகளிலும் வரும்முன் காப்போம் மருத்துவ முகாம் : தஞ்சை நகராட்சி தலைவர் தகவல்
தஞ்சாவூர் : தஞ்சை நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடக்க உள்ளது என்று தஞ்சை நகராட்சித் தலைவர் தேன்மொழி கூறினார்.தஞ்சை நகராட்சி சார்பில் கூட்டுறவு காலனியில் உள்ள நகராட்சி தொடக்கப்பள்ளியில் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. நகராட்சி ஆணையர் நடராஜன் முன்னிலை வகித்தார். கவுன்சிலர் சண்ராமநாதன் தலைமை வகித்தார்.
நகராட்சித் தலைவர் தேன்மொழி முகாமை தொடங்கி வைத்து பேசியதாவது: ஏற்கனவே இருமுறை வருமுன் காப்போம் திட்ட சிறப்பு முகாமை நடத்தி உள்ளோம். இப்போது 36வது வார்டு முதல் 40வது வார்டு வரையில் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் இந்த முகாம் நடத்தப்படுகிறது.முகாமில் ரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை, இ.சி.ஜி, ஸ்கேன், பொதுமருத்துவம், பல் சிகிச்சை உட்பட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு தடுப்பூசியும் போடப்படுகிறது. இதைத்தவிர பெண்களுக்கான நோய்களுக்கு பரிசோதனைகளும் நடந்தன.முகாமில் பங்கேற்போருக்கு மேல் சிகிச்சை தேவை என்றால் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்தின்கீழ் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்த முகாம் படிப்படியாக நகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் நடக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.முகாமில் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 5 வார்டுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் முகாமில் பங்கேற்று பயன் அடைந்தனர்.