கலப்பட பருப்புகள் விற்பனையா?
Friday, 12 March 2010 10:02
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 12.03.2010 கலப்பட பருப்புகள் விற்பனையா? உடுமலை, மார்ச் 11: கலப்பட பருப்புகள் விற்பனையில் உள்ளதா என, உடுமலையில் சுகாதார அதிகாரிகள் வியாழக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர். ÷உடுமலை பகுதிகளில் கலப்படம் செய்யப்பட்ட மற்றும் சாயமேற்படுத்தப்பட்ட துவரம் பருப்புக்கள், கடலை பருப்புக்கள் மற்றும் கடலை மாவு உள்ளிட்ட உணவு பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக புகார் இருந்து வந்ததது. இதைத் தொடர்ந்து, உடுமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில் சுகாதாரத் துறையினர் வியாபார நிறுவனங்கள் மற்றும் மளிகை கடைகளில் வியாழக்கிழமை திடீர் சோதனைகளை நடத்தினர். ÷ எரிசனம்பட்டி, பெரியவாளவாடி, அமராவதி நகர், செல்லப்பம்பாளையம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைச் சேர்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் இந்த சோதனைகளை நடத்தினர். இதில் பல்வேறு கிராமங்களில் உள்ள மளிகைக் கடை மற்றும் மொத்த விற்பனை நிலையங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த துவரம் பருப்பு, கடலை பருப்பு மற்றும் கடலை மாவு ஆகிய உணவு பொருட்கள் ஆய்வு செய்யப்பட்டன. ÷இந்த அதிரடி ஆய்வில் 18 மளிகை கடைகளில் சந்தேகத்துக்குரிய பருப்பு மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. உணவு கலப்பட சட்டத்தின் கீழ் பொது சுகாதார சட்ட விதிகளில் 1939-ன் படி கடைக்காரர்கள் முறையான உரிமம் பெற்றுள்ளனரா என்பதையும் சுகாதார விதி முறைகளின்படி பராமரிக்கப்பட்டு வருகின்றனவா என்பது குறித்தும் ஆய்வுகள் மேற் கொள்ளப்பட்டன. ÷சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.மகாராசன் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பி.நாகதிருமூர்த்தி, பி.கிருஷ்ணமூர்த்தி, கே.சிவானந்தம், எம்.கோடீஸ்வரன் உள்ளிட்ட இந்த ஆய்வுகளை மேற்கொண்டனர்.
Last Updated on Friday, 12 March 2010 10:03
|
மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை
Friday, 12 March 2010 09:53
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 12.03.2010 மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் சோதனை மானாமதுரை, மார்ச் 11: சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் மளிகைக் கடைகளில் சுகாதாரத் துறையினர் வியாழக்கிழமை சோதனை நடத்தி இங்கு விற்கப்படும் பருப்பு வகைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் ரகுபதி தலைமையில் மானாமதுரை வட்டார உணவு ஆய்வாளர் முத்துராமலிங்கம் மற்றும் துறை அலுவலர்கள் மானாமதுரையிலுள்ள பல்வேறு மளிகைப் பொருள்கள் விற்பனைக் கடைகளில் சோதனை நடத்தினர். சோதனையின்போது, இக் கடைகளில் விற்கப்படும் பருப்பு வகைகளின் தரத்தை ஆய்வு செய்தனர். பல கடைகளில் இவர்கள் பருப்பு வகைகளை சோதனைக்கு மாதிரி எடுத்துச் சென்றனர். இச் சோதனை குறித்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் ரகுபதி நிருபர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இச் சோதனை 9 இடங்களில் நடத்தப்படுகிறது. மகாராஷ்டிரம், பிகார் உள்ளிட்ட சில மாநிலங்களில் அதிகம் விளையும் கேசரி பருப்பு வகைகளை இந்த மாநிலங்களில் உள்ள வசதியில்லாத மக்கள் அதிகம் வாங்கி பயன்படுத்துகின்றனர். இந்த பருப்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு பின்னர் கை, கால்கள் செயல் இழந்துவிடும். இந்த கேசரி பருப்பை தமிழகத்தில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பருப்பை தமிழகத்தில் மளிகைக் கடைகளில் விற்கப்படும் பருப்பு வகைகளுடன் கலந்து விற்பனை செய்யப்படுகிறதா என்பது குறித்து சோதனையின்போது ஆய்வு செய்தோம். அப்படி எந்த கடைகளிலும் விற்பனை செய்யப்படவில்லை. கடைகளில் நடத்திய சோதனையின்போது மாதிரிக்காக எடுத்துச் செல்லப்படும் பருப்பு வகைகளை பரிசோதனைக்காக கொண்டு செல்வோம். பரிசோதனையில் பருப்பு வகைகள் தரம் குறைந்திருந்தால் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இச் சோதனையின்போது மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் சஞ்சீவி உடன் இருந்தார்.
Last Updated on Friday, 12 March 2010 09:54
விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல்
Friday, 12 March 2010 09:14
administrator
நாளிதழ்௧ள் -
பொது சுகாதாரம் / துப்புரவு
தினமணி 12.03.2010 விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற உணவுப் பொருள்கள் பறிமுதல் பெரம்பலூர், மார்ச் 11: பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த தரமற்ற , காலாவதியான உணவுப் பொருள்களை நகராட்சி அலுவலர்கள் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர். பெரம்பலூர் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் உள்ள கடைகள், விற்பனையகங்களில் தரமற்ற, காலாவதியான பொருள்கள் விற்கப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, நகராட்சி ஆணையர் அ. அசோக்குமார் தலைமையில் நகராட்சி அலுவலர்கள் வெங்கடாஜலம், பன்னீர்செல்வம், ராகவன், ராஜா ஆகியோர் அடங்கிய குழுவினர் வியாழக்கிழமை திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பெரம்பலூர் புதிய, பழைய பேருந்து நிலையங்கள், கடை வீதி, பள்ளிவாசல் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அவர்கள் திடீர் ஆய்வு நடத்தி,னர். இந்த ஆய்வில், காலாவதியான கடலை மாவு, துவரம் பருப்பு, கடலை பருப்பு, சிப்ஸ், முருக்கு வகைகள், உணவு வகைகள், உணவு எண்ணை உள்ளிட்ட சுமார் 100 கிலோ மதிப்பிலான உணவுப் பொருள்களை பறிமுதல் செய்தனர். மேலும், தரமற்ற முருக்கு வகைகளை, சில்லரை விற்பனை கடைகளுக்கு விநியோகம் செய்ய பயன்படுத்தப்பட்ட வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் நகராட்சி ஆணையர் அசோக்குமார் கூறியது: தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் உத்தரவின் பேரில், பெரம்பலூர் நகரில் ஆய்வு மேற்கொண்டு, கடைகளில் விற்பனைக்கு வைத்திருந்த- உணவில் சேர்க்கத் தகுதியற்ற, உடல் நலத்துக்கு கேடு விளைவிக்க கூடிய பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. மளிகைக் கடைகளில் பாத்திரங்களில் விற்பனை செய்யப்படும் உணவுப் பொருள்களை வாங்குவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். மேலும், கடைகளில் காலாவதியான பொருள்களை விற்பனை செய்வோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.
Last Updated on Friday, 12 March 2010 09:15
|
|
|
|
Page 320 of 519 |