தினமலர் 03.03.2010
ரோட்டோர உணவகங்களில் ரெய்டு : நடத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவு
விருதுநகர்: தமிழகம் முழுவதும் ரோட்டோர உணவகங்களில் ரெய்டு நடத்த அதிகாரிகளுக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. நீண்டதூர பஸ் பயணிகளுக்காக நெடுஞ்சாலைகளில் உள்ள மோட்டல்களில் அதிக விலையில் உணவு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு, பிரிட்ஜ்களில் சேமித்து வைத்து பின், தயாரிக்கப்படும் உணவு வகைகள், பயணிகளுக்கு ஒவ்வாத நிலையை ஏற்படுத்துகின்றன. சிலருக்கு நோய் பரவுகிறது.
ரெய்டு நடத்த உத்தரவு: இந்த உணவகங்களில், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சுகாதார இணை இயக்குனர்கள், துணை இயக்குனர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்களுக்கு அரசு உத்தரவிட்டு உள்ளது. ரோட்டோர உணவகங்களில் உணவு தயாரிக்கும் அறை, ஸ்டோர் ரூம், உணவு பொருள்களை தயாரித்து ஸ்டாக் வைத்துள்ள பகுதிகள், மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளை ஆய்வு செய்யும் படி உத்தரவிட்டுள்ளது.
ஓட்டல் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ்: இந்த அதிரடி சோதனையில் அதிகாரிகள் ஈடுபடும் போது சுகாதாரக்கேடாக உள்ள பொருள்களை கைப்பற்றி அழித்து விட வேண்டும். ஓட்டல்களில் குறைபாடாக உள்ள சமையலறை, ஸ்டோர் ரூம்கள், பத்து நாட்களுக்குள் சரி செய்ய வேண்டும் என நோட்டீஸ் வழங்கவேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட ஓட்டல் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. புறநகர், நகராட்சி, பேரூராட்சி என அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து ரெய்டு நடத்த சுகாதாரத்துறை உத்தரவிட்டு உள்ளது.