தினகரன் 03.06.2010
மாநகராட்சி கமிஷனர் அறிவிப்பு குர்கானில் நவீன வசதியுடன் திடக்கழிவு மேலாண்மை நிலையம்
குர்கான், ஜூன் 3: குர்கானில் நவீன வசதியுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கப்பட உள்ளது என குர்கான் மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் குல்லார் தெரிவித்தார்.
குர்கான் மாநகராட்சி தொடங்கப்பட்டு 2ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நிருபர்களிடம் கமிஷனர் குல்லார் கூறியதாவது:
குர்கான் மாநகராட்சி தொடங்கப்பட்டு 2 ஆண்டு நிறைவு பெற்றுவிட்டது. குர்கானில் வளர்ச்சிப் பணிகளுக்காக ரூ.74.83 கோடி செலவழிக்கப்பட்டுள்ளது. ரூ.56.64 கோடிக்கு புதிய பணிகள் நடந்து வருகின்றன.
மேலும் ஒவ்வொரு வளர்ச்சிப் பணியும் செயல்படுத்தப்படும் போது அதை கண்காணிக்க அந்தப் பகுதியை சேர்ந்த 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. இந்த குழுவின் பரிந்துரையில்லாமல் ஒப்பந்தகாரர் களுக்கு எந்தப் பணமும் வழங்கப்படமாட்டாது.
குர்கானில் திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற குர்கான் மக்களி நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட உள்ளது. சக்கர்பூர் பகுதியில் உள்ள கச்ரா சவுக்கில்தான் இதுநாள்வரை குப்பைகள் கொட்டப்படுகின்றன.
பந்த்வாரி மாவட்டத்தில் நவீன வசதியுடன் கூடிய திடக்கழிவு மேலாண்மை நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும்.
குருகான் என்பதுதான் குர்கான் என்று மருவி விட்டது. நாட்டில் உள்ள எல்லா மாநகராட்சிகளுக்கும் நிர்வாகத்தில் குருவாக குர்கான் திகழும்.
குர்கானில் 8 ஏக்கர் பரப்பில் நவீன பசு காப்பகம் அமைக்கப்பட்டுள்து. இங்கு 500க்கும் அதிகமான பசுக்கள், காளைகள், எருமைகள் பாதுகாக்கப்படுகின்றன. அக்டோபர் மாதத்துக்கு பின், குர்கானில் தெருக்களில் கால்நடைகள் சுற்றி திரிவதை பார்க்க முடியாது. இவ்வாறு குல்லார் கூறினார்.