தினமலர் 04.06.2010
எட்டயபுரத்தில் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிப்பு : மறுசுழற்சிக்காக சிமெண்ட் தொழிற்சாலைக்கு சென்றது
எட்டயபுரம் : எட்டயபுரத்திலிருந்து சங்கர் சிமெண்டு ஆலைக்கு மினிலாரியில் மறுசுழற்சிக்கு பிளாஸ்டிக் கழிவுகள் சங்கர் சிமெண்டு ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
மெல்லிய பிளாஸ்டிக் பொருள்களினால் சுற்றுப்புறசூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் பிளாஸ்டிக் பொருள்கள் உபயோகத்தை குறைக்க வேண்டுமென்று அரசு சார்பில் மக்களுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படுகிறது. எட்டயபுரம் டவுன் பஞ்.,சில் இது சம்பந்தமாக விழிப்புணர்வு நடக்கிறது.
டவுன் பஞ்.,சில் சேரும் குப்பைகளில் மட்கும் குப்பை, மட்காத குப்பை என்று குப்பைகளை தனியாக பிரித்தெடுத்து மட்காத குப்பை பிளாஸ்டிக் பொருட்களை நெல்லை சங்கர் சிமெண்ட் நிறுவனத்திற்கு கொண்டு சென்று அங்கு வைத்து அவை மறுசுழற்சி செய்யப்பட்டு வருகிறது. எட்டயபுரம் டவுன் பஞ்.,ஐ தலைமையிடமாகக் கொண்டு எட்டயபுரம் 694 கிலோ, ஆத்தூர் 45 கிலோ, ஏரல் 45 கிலோ, சாயர்புரம் 36 கிலோ, ஸ்ரீவைகுண்டம் 90 கிலோ, பெருங்குளம் 30 கிலோ என மொத்தம் 940 கிலோ சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை மினிலாரி மூலம் எட்டயபுரத்திலிருந்து சங்கர்சிமெண்டு ஆலைக்கு டவுன் பஞ்.,தலைவர் ராஜேந்திரன் தலைமையில் கொடியசைத்து பொது சுகாதார மினிலாரியை அனுப்பி வைத்தனர்.டவுன் பஞ்.,செயல் அலுவலர் ரெங்கநாதன் முன்னிலை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ராஜாமுத்து, சிங்கராஜ், டவுன் பஞ்.,துணைத் தலைவர் கோவிந்த ராஜபெருமாள், கவுன்சிலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.