தினகரன் 28.06.2010
தாராபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் ஆட்கள் பற்றாக்குறையால் பாதிப்பு
தாராபுரம், ஜூன் 28:தாராபுரம் நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை காரணமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.
தாராபுரம் நகராட்சியில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திடக்கழிவு மேலாண்மை திட்டம் துவங்கப்பட்டது. 7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு மட்டுமே கொண்ட இந்த சிறிய நடுத்தர நகரத்தில், 30 வார்டுகளில் உள்ள வீடுகள், கடைகள், வணிக வளாகங் கள், உணவு விடுதிகள் மற் றும் அலுவலகங்கள் போன்ற அனைத்து இடங்களிலும் மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து பெறப்பட்டு, குடியிருப்புகளுக்கு வெளியே 10.18 ஏக்கர் பரப்பளவு கொண்ட உரக்கிடங்கில் சேகரிக்கப்பட்டது. அங்கு, உயிர் உரம் தயாரிக்கப்பட்டு வந்தது. சராசரியாக நாளொன்றுக்கு 5 டன் மக்கும் குப்பை பிரித்தெடுக்கப்பட்டு, உரம் தயாரிக்கப்பட்டது.
தாராபுரம் நகராட்சியில் ஏரோபிக் முறையில் சிறிய அளவில் மண்புழுக்கள் மூலமாகவும், பெரிய அளவில் விண்ரோஸ் முறையிலும் தயாரிக்க திட்டமிட்டு, அதற்காக உரக்கிடங்கில் 2400 சதுர மீட்டர் பரப்பளவில் கான்கிரீட் தளம் வடிகால் வசதியுடன் அமைக்கப்பட்டது. இத் திட்டம் முழுக்க, முழுக்க ஆட்களை கொண்டுதான் செயல்படுத்த முடியும். ரசாயன உரங்களில் நைட் ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்றவைகள் உள்ளன. இந்த உரத்தில் கூடுதலாக அயர்ன், மாங் கனீசு, காப்பர், கால்சியம், சல்பர் போன்ற சத்துகள் இருப்பதால் இப்பகுதி விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர்.
டன் ஒன்றுக்கு 50 ரூபாய் மட்டுமே பெறப்பட்டு, இங்கு தயாரிக்கப்படும் உரங்கள் விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது நகராட்சியில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக திட்டம் முழுமையாக செயல்படுத்த முடியாமல் முடங்கி கிடக்கிறது. போதுமான வசதிகள், தேவையான நிதி ஆதாரங்கள் இருந்தும் இந்த திட்டம் முடங்கிக் கிடப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தற்போது உள்ள சுய உதவிக்குழுக்கள் மூலமாக ஆட்களை நியமித்தும் அல்லது ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் உள்ள உறுப்பினர்களைக் கொண்டும் இத்திட்டத்தை நிறைவேற்றினால் பல வகையில் பயன்பெற முடியும் என அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.