தினமலர் 06.08.2010
திடக்கழிவு மேலாண்மை திட்டம்
சோழிங்கநல்லூர் : சோழிங்கநல்லூர் பேரூராட்சியில் செயல்படுத்தப்படும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, கூவம் நதிக்கரையோரம் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர்.சோழிங்கநல்லூர் பகுதியில் நாள் ஒன்றுக்கு ஐந்து டன் குப்பைகள் சேகரமாகின்றன. அவற்றை எருவாக்கும் வகையில், 2007ம் ஆண்டு முதல் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.இந்த வகையில் மாதத்திற்கு மூன்று டன் மக்கும் உரமும், 300 கிலோ மண்புழு உரமும் தயாரிக்கப்படுகிறது.மக்கும் உரம் கிலோ மூன்று ரூபாய்க்கும், மண்புழு உரம் கிலோ 10 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. எனவே, இத்திட்டம் அப்பேரூராட்சிக்கு பயன் அளித்துள்ளது.இந்நிலையில், கூவம் நதிக்கரையில் உள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களின் ஊராட்சித் தலைவர்களுக்கு திடக்கழிவு சேகரிப்பு, அகற்றல் மற்றும் மேலாண்மை முறைகளை மேம்படுத்துவது குறித்த ஒருநாள் கலந்துரையாடல் பட்டறை நடந்தது.அதன் ஒரு பகுதியாக சோழிங்கநல்லூர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை ஊராட்சித் தலைவர்கள் பார்வையிட்டனர்.அவர்களுக்கு குப்பையில் இருந்து மக்கும் உரம் மற்றும் மண்புழு உரம் தயாரிப்பது குறித்து பேரூராட்சித் தலைவர் அரவிந்த் ரமேஷ் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் துணைத் தலைவர் உமாபதி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.