தினமணி 13.09.2010
ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்க்கு திடக்கழிவு மேலாண் பயிற்சி
ராசிபுரம், செப்.12: ராசிபுரம் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, நகராட்சி சுகாதார அலுவலர்கள், துப்புரவு பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சிறப்பாக செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம், நகர்மன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது. நகர்மன்றத் தலைவர் என்.ஆர்.ராமதாஸ் தலைமை வகித்தார். துணை தலைவர் ஆர்.எஸ்.ரங்கசாமி, ஆணையாளர் கு.தனலட்சுமி முன்னிலை வகித்தனர்.
சென்னை எக்ஸ்னோரா தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த விஜய் ஆனந்த், பெங்களூரு வாட்டர் எய்டு தொண்டு நிறுவன நிர்வாகி, குளித்தலை நகர்மன்றத் தலைவர் அமுதவேல் ஆகியோர், திடக்கழிவு மேலாண்மை திட்டம் மற்றும் நகர சுகாதார திட்டம் செயல்படுத்தப்படுவது குறித்து எடுத்துக் கூறினர்.
இந்தத் திட்டங்களை ராசிபுரம் நகராட்சியிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து இத் திட்டத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் குளித்தலை நகராட்சியிலுள்ள எரு பூங்காவை ராசிபுரம் நகர்மன்ற உறுப்பினர்கள், நகராட்சி சுகாதார அலுவலர்கள், பணியாளர்கள் பார்வையிட்டு பயிற்சி பெறுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இதன்படி, நகராட்சி ஆணையர் தலைமையில் சுகாதார அலுவலர்கள், மேற்பார்வையாளர்கள், துப்பரவு பணியாளர்கள் என 38 பேர் குளித்தலை சென்றனர். அங்குள்ள எருப் பூங்காவை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து மக்கும் குப்பை, மக்காத குப்பை எனப் பிரித்து வாங்குவது, பிளாஸ்டிக் குப்பை மறுசுழற்சி, மண்புழு உரமாக மாற்றுவது உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொண்டனர்.