தினமலர் 10.11.2010
திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலர் குப்பை தொட்டிகள்
ராமேஸ்வரம் : மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலரிலான குப்பை தொட்டிகள் வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பாலிதீன் தவிர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, மரம் நடுதல், கடலோர தூய்மைப் பணி போன்ற திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலர் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளிகளில் அன்றாடம் மாணவர்களால் போடப்படும் காகிதம், துணி போன்ற மக்கும் தன்மையுடைய குப்பைகளை பச்சை கலர் தொட்டியிலும், மக்காத பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை சிவப்பு கலர் தொட்டியிலும் போடும் வகையில், குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி போஸ் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் 1,284 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிதியில் இருந்து, குப்பைத் தொட்டிகள் வாங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து ஏற்கனவே மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. தற்போது திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள 182 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போஸ் கூறினார்.