தினமலர் 10.11.2011
ரூ.2.17 கோடியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கு நடவடிக்கை
தர்மபுரி : தர்மபுரி நகராட்சியில் 2 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த நகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தர்மபுரி நகராட்சியில் தினம் 32 மெட்ரிக் டன் குப்பை கழிவுகள் சேகரிக்கப்பட்டு, கழிவுகள் பென்னாகரம் ரோட்டில் உள்ள சோகத்தூர் அருகே கொட்டப்பட்டு வருகிறது. கடந்த 40 ஆண்டாக இந்த பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது.கடந்த காலங்களில் விவசாய பணிக்கு குறைந்த விலையில் குப்பை கழிவுகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி வந்தனர். தற்போது, மக்காத குப்பைகள் கலந்து இருப்பதால், இந்த குப்பைகளை விவசாயிகள் வாங்கி பயன்படுத்துவதில்லை. பென்னாகரம் சாலையில் குப்பைகள் கொட்டப்படுவதால், அப்பகுதி மக்கள் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டøது இதை தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி மூலம் குப்பை கொட்ட நீதிமன்றத்தில் அப்பகுதி மக்கள் தடை பெற்றனர்.நகராட்சி மூலம் தடங்கம் கிராமத்தில் 11 ஏக்கர் பரப்பில் உரக்கிடங்கு அமைக்கப்பட்டு தற்போது, குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வருகிறது. பென்னாகரம் சாலையில் உள்ள குப்பைகளையும் அகற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. தடங்கம் பகுதியில் குப்பைகளை மக்கும், குப்பைகள், மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு சேகரிக்கப்படுகிறது.இங்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் எடை மேடை, காவலர் குடியிருப்பு, தண்ணீர் வசதி, சாலை வசதி, மின் விளக்கு வசதி, மண்புழு உரம் தயாரித்தல், மழைநீர் வடிகால் வசதி ஆகியவை ஏற்படுத்தவும், இதற்காக 2 கோடியே 17 லட்ச ரூபாய் மதிப்பில் திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளது.திட்ட மதிப்பீடு அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கு ஒப்புதல் பெறும் வகையில் இதற்கான தீர்மானம் இன்று நடக்கும் நகராட்சி கூட்டத்தில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.