தினமணி 23.08.2012
திருவள்ளூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கூடைகள் விநியோகம்
திருவள்ளூர், ஆக. 22: திருவள்ளூர் நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் குடியிருப்புகளுக்கு பிளாஸ்டிக் கூடைகளை நகர்மன்றத் தலைவர் ஏ.பாஸ்கரன் புதன்கிழமை வழங்கினார்.திருவள்ளூர் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. நாள் ஒன்றுக்கு 25 டன் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன.
பெருகி வரும் குப்பைகளை அகற்றவும், மக்கும், மக்காத குப்பைகளை சேகரிக்கவும் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி 2, 3, 4, 5, 6, 7, 8, 9 உள்ளிட்ட 8 வார்டுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
அதன்படி மொத்தம் 2500 வீடுகளுக்கு பச்சை, சிவப்பு என தலா 2 பிளாஸ்டிக் கூடைகள் ரூ.1 லட்சம் செலவில் வழங்கப்படுகிறது. இதற்கான விழா 7-வது வார்டில் நடைபெற்றது.
பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் கூடைகளை நகர்மன்றத் தலைவர் பாஸ்கரன் வழங்கினார். ஆணையர் சரவணகுமார், கவுன்சிலர்கள் ராமதாஸ், கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.