மாலை மலர் 02.09.2012
திருச்சி மாநகராட்சி உறையூர் பகுதியில் குப்பைகளை பிரித்து எடுப்பதற்காக வீட்டுக்கு வீடு 2 குப்பை கூடைகள்
திருச்சி, செப்.2-குப்பை இல்லாத நகரமாக திருச்சியை மாற்றவேண்டும் என்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனாலும் குப்பைகள் முற்றிலுமாக ஒழிந்த பாடு இல்லை.துப்புரவு பணியாளர் பற்றாக்குறை, குப்பைகளை சேகரிப்பதற்கு போதுமான வாகனங்கள் இல்லாமை போன்ற காரணங்களால் பல தெருக்களில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் குவிந்து சுகாதார கேட்டை ஏற்படுத்துகின்றன.
குப்பை பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக மாநகராட்சி 57-வது வார்டு (உறையூர் பகுதி) அ.தி.மு.க கவுன்சிலர் வனிதா வார்டுக்கு உட்பட்ட வீடுகளுக்கு தனது சொந்த செலவில் தலா 2 குப்பை கூடைகள் வழங்கி வருகிறார்.
ஒரு குப்பை கூடையில் மக்கும் தன்மை உடைய குப்பைகளையும், இன்னொரு கூடையில் மக்காத தன்மை உடைய பிளாஸ்டிக், கேரி பேக் போன்றவற்றையும் போட்டு மாநகராட்சி துப்புரவு பணியாளர்களிடம் கொடுக்க வேண்டும் என கூறி வருகிறார்.