Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உதகை நகராட்சியில் ரூ.5.5 கோடி செலவில் புதிய சுகாதார திட்டம்

Print PDF
தின மணி            24.02.2013

உதகை நகராட்சியில் ரூ.5.5 கோடி செலவில் புதிய சுகாதார திட்டம்

உதகை நகராட்சியில் சுகாதாரத்தை மேம்படுத்த ரூ.5.5 கோடி செலவில் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இத்திட்டத்தின்கீழ் மட்கும் குப்பைகளும், மட்கா குப்பைகளும் தனித்தனியாக பிரிக்கப்படுவதற்கு ஏதுவாக வீடுகள்தோறும் சிவப்பு, பச்சை ஆகிய இரு நிறங்களிலான குப்பைத் தொட்டிகள் விநியோகமும் தொடங்கியுள்ளது.

இந் நிலையில், உதகை நகரின் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.5.5 கோடி செலவில் புதிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. அதன்படி, தீட்டுக்கல் பகுதியிலுள்ள நகராட்சி குப்பை சேகரிப்பு மையத்தில் ரூ.3.48 கோடி செலவில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பிரிவு தயாராகி வருகிறது. ரூ.1.8 கோடி செலவில் அந்தத் தளத்திலுள்ள குப்பைகளை அள்ளவும், சுத்தம் செய்யவும் தேவையான பொக்லைன்கள், டிப்பர் லாரிகள், ஒரே நேரத்தில் 5 டன் குப்பையை அள்ளக்கூடிய திறன் படைத்த காம்பேக்ட் வாகனம், குறுகிய வீதிகளுக்குள்ளும் சென்று குப்பைகளை சேகரிக்க பிக்-அப் ஆட்டோக்கள் போன்றவை வாங்கப்படுகின்றன.

உதகை நகரில் ஏற்கனவே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின்கீழ் நகராட்சியிலுள்ள 22 வார்டுகளில் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கும் பணி நடந்து வருகிறது. குப்பையை உரமாக மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

தீட்டுக்கல் குப்பை கொட்டும் தளத்திலிருந்து குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணிகள் 3 மாதத்துக்குள் தொடங்குமென உதகை நகர்மன்ற ஆணையர் சிவகுமார், நகர்மன்ற தலைவர் சத்தியபாமா ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

Last Updated on Tuesday, 26 February 2013 06:56