Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சியில் ரூ.3.66 கோடிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த அறிக்கை தயாரிப்பு

Print PDF
தினகரன்       08.04.2013

மாநகராட்சியில் ரூ.3.66 கோடிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த அறிக்கை தயாரிப்பு


ஈரோடு: ஈரோடு மாநகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ரூ.3.66 கோடிக்கு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு கருத்துரு அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து அனுமதி பெற்ற பிறகு விரைவில் புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

ஈரோடு மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் மாநகராட்சிக்கு சொந்தமான வெண்டிபாளையம், வைராபாளையம் பகுதியில் உள்ள குப்பை கிடங்குகளில் சேகரிக்கப்படுகிறது.

அங்கு குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு உரமாக தயாரிக்கப்படுகிறது. மாநகராட்சி பழைய வார்டுகளில் இருந்து தினசரி 100 டன் குப்பைசேகரிக்கப்பட்டு வந்தது. ஆனால், மாநகராட்சி விரிவுப்படுத்தப்பட்ட நிலையில் தினசரி 250 டன் முதல் 300 டன் வரை குப்பைசேகரிக்கப்பட்டு வருகிறது.

குப்பைகளை சேகரிக்க துப்புரவு பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் போதிய துப்புரவு பணியாளர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் குப்பை அள்ள போதிய வாகனங்கள் இல்லாத நிலையில் இருந்து வந்தது.

இதையடுத்து, கடந்த 2011-12ம்நிதியாண்டில் திடக்கழிவு மேலாண்மை பணியினை மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின்கீழ் 5 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது. இந்த நிதியை கொண்டு 4 டம்பிளேசர் வாகனங்கள், 5 டிரைலர்கள், 2 மண் நிரப்பும் மற்றும் மண் அள்ளும் வாகனங்கள், 110 இரும்பு குப்பை கலன்கள், 10 கொசுஒழிப்பு புகை மருந்து கருவிகள், 10 கொசு ஒழிப்பு மருந்து தெளிப்பானகள், தள்ளுவண்டி வாங்கப்பட்டுள்ளது.  

மேலும், வைராபாளையத்தில் உள்ள உரக்கிடங்கிற்கு அதிக அளவில் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருவதால் அங்கு புதிதாக விண்ட்ரோஸ் உரமேடை, வாகனங்கள் செல்லும் வகையில் அணுகுசாலை போன்ற பணிகளும் நடந்து வருகிறது. மாநகராட்சி பரப்பளவு அதிகமாக உள்ளதால் நீண்ட தூரத்தில் இருந்து குப்பைகளை கொண்டு வரவேண்டிய நிலை உள்ளது. இதனால் 2012-13ம்நிதியாண்டில் கூடுதலாக ஒருகோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு தேவையான உபகரணங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி புதிதாக 125 குப்பை கலன்கள், 122 தள்ளுவண்டிகள், பாதாள சாக்கடை அடைப்பை நீக்கும் ஜெட்ராடிங் இயந்திரங்கள் வாங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நடப்பு நிதியாண்டில் கூடுதலாக வாகனங்கள், உபகரணங்கள் வாங்குவதற்காகவும் 3 கோடியே 66 லட்ச ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது. அரசிடமிருந்து அனுமதி பெற்ற பிறகு புதிய வாகனங்கள் வாங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, மாநகராட்சி ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் குப்பைகள் அதிகமாக உள்ளது. குப்பைகளை அள்ள ஏற்கனவே வாங்கப்பட்ட வாகனங்கள் பழைய நிலையில் உள்ளதால் புதியதாக வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் கூடுதல் வாகனங்கள் வாங்குவதற்காக 3.66 கோடி ரூபாய்க்கு திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விரைவில் அனுமதி பெற்ற பிறகு அடுத்த கட்ட பணிகள் தொடங்கும் என்றார்.