தினமணி 13.05.2013
குப்பைத் தொட்டியில் குப்பையை எளிதாகக் கொட்ட சாய்வுதள வசதி
குப்பைத் தொட்டியில் குப்பையை எளிமையாக கொட்டுவதற்கு குப்பைத் தொட்டிக்கு நிகராக சாய்வுதள வசதியை பணியாளர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நாளொன்றுக்கு 6 முதல் 7 டன் வரை குப்பை சேருகிறது. இங்கு சேரும் அனைத்து குப்பைகளையும் சேகரிக்கும் இடம் பல்லவன் சாலை மேம்பாலத்தின் கீழ் உள்ளது. மருத்துவமனையில் சேரும் குப்பையை ஒரு இடத்தில் கொட்டிய பிறகு மாநகராட்சியின் குப்பை லாரியில் எடுத்துச் செல்வது வழக்கமாக இருந்தது. இந்த முறையினால் சுகாதாரக் கேடு ஏற்படுவதுடன் வேலைப் பளு மற்றும் செலவும் அதிகமாக இருந்தது. குப்பையை கீழே சேமித்து வைப்பதற்கு பதிலாக 10 குப்பைத் தொட்டிகள் அமைக்கப்பட்டு அதில் போடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மருத்துவமனையில் சேகரிக்கப்படும் குப்பையை குப்பைத் தொட்டியில் தூக்கிக் கொட்டுவது சிரமமாக இருந்தது.
இப்போது குப்பைத் தொட்டிக்கு ஏற்ப பெரிய சாய்வுதளம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த சாய்வு தளத்தின் அருகில் 5 குப்பைத் தொட்டிகளை வைக்க முடியும். அதுபோன்று இரண்டு சாய்வு தளங்கள் அமைத்து குப்பைத் தொட்டியில் குப்பையைக் கொட்டுவது எளிமையாக்கப்பட்டுள்ளது.
இதனால், குப்பை கொட்டுவது எளிதாவதுடன் குப்பை லாரிகள் வந்து குப்பை எடுத்துச் செல்வதும் எளிமையாக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை ஊழியர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து மருத்துவமனை முதல்வர் டாக்டர் வே.கனகசபை கூறியது: மருத்துவமனையில் அதிகமாக குப்பை சேர்வதால் குப்பை அள்ளுவதில் சிரமம் ஏற்பட்டது.
அதனால், மாநகராட்சியில் இருந்து 10 குப்பைத் தொட்டிகள் பெறப்பட்டு அதில் குப்பை கொட்டுவதற்கு வசதியாக சாய்வுதள அமைப்பு ரூ. 2 லட்சத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
சிறிய குப்பை வண்டிகளை அதில் இழுத்துச் சென்று குப்பைகளைக் எளிதாக கொட்ட முடியும்.
மேலும் 10 குப்பைத் தொட்டிகளை மாநகராட்சியிடம் கேட்டுள்ளோம் என்றார் அவர்.