Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தமிழகத்தில் முதல் முறையாக ஆற்காடு நகராட்சியில் காய்கனி கழிவில் இருந்து மின் உற்பத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்

Print PDF

தினகரன்         10.05.2013

தமிழகத்தில் முதல் முறையாக ஆற்காடு நகராட்சியில் காய்கனி கழிவில் இருந்து மின் உற்பத்தி வீடியோ கான்பரன்ஸ் மூலம் முதல்வர் துவக்கிவைத்தார்


ஆற்காடு, : தமிழகத்தில் முதல் முறையாக, ஆற்காடு நகராட்சியில், காய்கனி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதல்வர் ஜெயலலிதா நேற்று தொடங்கிவைத்தார்.

தேவையான அளவுக்கு தமிழகத்தில் மின் உற்பத்தியில்லாமல் இதுவரை சந்திக்காத அளவுக்கு தமிழக மக்கள் கடந்த ஒரு ஆண்டுக்கு மேலாக மின் தடையை சந்தித்து வருகிறார்கள். இன்றைக்கு காற்றாலை மற்றும் சூரிய மின் சக்திமூலமும் நம் மின் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்தவகையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கனி கழிவுகளில் மின் உற்பத்தியை தயாரிக்கும் திட்டம் தமிழகத்தில் முதல் முறையாக வேலூர் மாவட்டம் ஆற்காடு நகராட்சியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.

ஆற்காடு நகராட்சி, அண்ணாநகர் அருகே திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் காய்கனி கழிவுகளில் இருந்து பயோகேஸ் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்ட கட்டுமானப்பணிகள், பொதுமக்கள் பங்களிப்போடு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்டது. இதற்காக ரூ.45 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கட்டுமானப்பணிகள் முடிந்த நிலையில் கடந்த சில வாரங்களாக சோதனை உற்பத்தி நடந்தது. இந்த திட்டம் வெற்றி பெற்றதையொட்டி மின் உற்பத்தி தொடக்க விழா நேற்று காலை 10 மணிக்கு நடந்தது. திட்டத்தை சென்னையில் இருந்து முதல்வர் ஜெயலலிதா வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்தார்.

ஆற்காட்டில் நடந்த விழாவுக்கு வி.கே.ஆர்.சீனிவாசன் எம்எல்ஏ தலைமை தாங்கினார். நகராட்சி தலைவர் ஆர்.புருஷோத்தமன், துணைத்தலைவர் எஸ்.கீதாசுந்தர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் செ.பாரிஜாதம் வரவேற்றார். வேலூர் மாவட்ட கலெக்டர் பொ.சங்கர் குத்துவிளக்கு ஏற்றி, மின் உற்பத்திக்கான சுவிட்சை ஆன் செய்தார். அதை தொடர்ந்து அப்பகுதியில் உள்ள விளக்குகள் எரிந்தன.

இதுகுறித்து கலெக்டர் பொ.சங்கர் விடுத்துள்ள அறிக்கை:

இந்த திட்டத்தின் மூலம் தினசரி 265 யூனிட் மின்சாரம் தயாரிக்கப்பட்டு, 4 வார்டுகளில் உள்ள தெரு விளக்குகள் எரிய வைக்கப்படும். மேலும், நகராட்சி பகுதியில் உள்ள காய்கனி கழிவுகள், ஓட்டல் உணவு கழிவுகளையும் பயன்படுத்துவார்கள்.

இந்த கழிவுகள் ஏற்கனவே நகராட்சி சார்பில் தனியார் மூலம் அகற்றப்பட்டு வந்தது. இதற்கு ஆண்டுக்கு நகராட்சி ரூ.7.86 லட்சம் செலவு செய்தது. மேலும், 4 வார்டுகளிலும் தெரு விளக்குகள் எரிய ஆண்டுக்கு ரூ.5.24 லட்சம் மின்கட்டணம் செலுத்தி வந்தது. மொத்தம் ரூ.13.10 லட்சம் வரை செலவு செய்தது.

இந்த புதிய மின் உற்பத்தி திட்டத்திற்கு ஆண்டுக்கு நகராட்சி சார்பில் ரூ.4.8 லட்சம் மட்டும் செலவு ஆகும். இதன் மூலம் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.9.2 லட்சம் நிகர லாபம் கிடைக்கும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விழாவில் ஒன்றியக்குழு தலைவர்கள் தாஜ்புரா எம்.குட்டி, சி.மூர்த்தி, மாவட்ட அதிமுக செயலாளர் எஸ்.ஆர்.கே. அப்பு, மகாலட்சுமி நர்சிங் கல்லூரி தாளாளர் டி.எல்.பாலாஜி, சித்தீஸ்வரர் பாலிடெக்னிக் கல்லூரி தாளாளர் டி.தரணிபதி, ஜிவிசி கல்லூரி தலைவர் வக்கீல் துரைசாமி, அதிமுக நிர்வாகிகள் எம்.சங்கர், ஏ.ஜி.பிச்சை முத்து, ஏ.காந்தி, சுமிதாவேல் முருகன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், தொண்டு நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியை மக்கள் தொடர்பு அலுவலர் பாலசக்திதாசன் தொகுத்து வழங்கினார்.