தினமலர் 16.06.2013
"பயோ காஸ்' மூலம் இயங்கும் சமுதாய சமையல் கூடம்:முதன் முதலாக தாம்பரத்தில் துவக்கம்
![](http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_73594520130616061844.jpg)
தாம்பரம்:"செப்டிக்டேங்' மற்றும் காய்கறி கழிவுகளில் இருந்து, பயோ
காஸ் மூலம் இயங்கும், சமுதாய சமையல் கூடம், தாம்பரத்தில் துவக்கப்பட்டு
உள்ளது.
ரூ.10 லட்சம் :தாம்பரம்
நகராட்சியில், 39 வார்டுகள் உள்ளன. ஒரு லட்சத்து 70 ஆயிரம் பேர்
வசிக்கின்றனர். 21வது வார்டு, குடிசை பகுதி அதிகம் கொண்டது. இந்த வார்டில்
மட்டும், 292 குடியிருப்புகள் உள்ளன. 135 வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை.
125 வீடுகளில், எரிவாயு சிலிண்டர் இல்லை.இப்பகுதிவாசிகள், சாலையோரத்தையே
கழிப்பிடமாக பயன்படுத்தி வந்தனர். இதனால், அவர்களின் வசதிக்காக, 2003ல், 10
லட்சம் ரூபாய் செலவில், ஒருங்கிணைந்த சுகாதார வளாகம் கட்டப்பட்டது.இதில்,
ஏழு பெண்கள் கழிப்பறை, ஐந்து ஆண்கள் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. தற்போது,
அப்பகுதி மக்கள் அனைவரும், இந்த சுகாதார வளாகத்தை பயன்படுத்தி
வருகின்றனர்.
இந்த நிலையில், இப்பகுதி மக்கள்
சமையல் செய்ய வசதியாக, "செப்டிக் டேங்' மற்றும் காய்கறி கழிவுகளை கொண்டு,
சமுதாய சமையல் கூடம் ஒன்றை அமைக்க, நகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. இதை
அடுத்து, பூமிக்கு அடியில் முட்டை வடிவிலான எரி கொள்கலன் கட்டப்பட்டது.
12
காஸ் அடுப்புகள்இது, சிமென்ட் கான்கிரீட்டால் வடிவமைக்கப்பட்டு உள்ளது.
இதில், செரிவடைவதால் உருவாகும் எரிவாயு உறுதி செய்யப்பட்டு,
அதனடிப்படையில், பயோ காஸ் மூலம் சமையல் செய்யலாம். இதற்காக, 12 காஸ்
அடுப்புகள் கொண்ட சமுதாய சமையல் கூடம் கட்டப்பட்டு உள்ளது. கட்டணம் இல்லாத
சமையல் கூடத்தை, அப்பகுதி மக்கள், காலை, 6:00 முதல், 9:00 மணி வரையும்,
மாலை, 5:00 முதல், 8:00 மணி வரையிலும் பயன்படுத்தி கொள்ளலாம். இந்த சமையல்
கூடத்தை நேற்று முன்தினம் உள்ளாட்சி துறை அமைச்சர் முனுசாமி, துவக்கி
வைத்தார்.