தினகரன் 12.08.2013
பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் முழு சுகாதார திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை
பெ.நா.பாளையம்,: பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா அமைப்பு இணைந்து பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் பேரூராட்சி பகுதியில் முழு சுகாதாரத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக பேரூராட்சிக்கு உட்பட்ட 6, 7, 8, 9 வார்டுகளில் 1000 வீடுகளில் மக்கும் குப்பை, மறுசுழற்சி குப்பை, மக்காத குப்பை என தனித்தனியாக பொதுமக்கள் சேமிக்கும் விதத்தில் குப்பைக்கூடைகள் மற்றும் மறுசுழற்சி குப்பைகளை சேகரிக்க பைகள் வழங்க நடவடிக்கை எடுத்து வீடு தோறும் வழங்கப்பட்டது. இதன் துவக்க விழாவிற்கு வார்டு கவுன்சிலர் மாரியப்பன் வரவேற்று பேசினார். செயல் அலுவலர் துவாரகநாத்சிங், பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை வகித்தார்.
ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா திட்ட இயக்குனர் பரிசுத்தம் திட்டம் செயல்படுத்தும் முறைகள் பற்றி விளக்கி கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பிரிக்கால் நிறுவனத் துணைத்தலைவர் வனிதாமோகன் சுற்றுசூழல் சுகாதாரம் அவசியம் பற்றி விளக்கி பேசினார். வீடுகளுக்கு குப்பைக்கூடைகள் வழங்கும் திட்டத்தை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் துணைத்தலைவர் சந்திரன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.