தினகரன் 12.08.2013
மாநகராட்சி பகுதி தனியார் நிறுவனங்களில் திடக்கழிவு அகற்ற கட்டணம் நிர்ணயம்
ஈரோடு, : ஈரோடு மாநகராட்சி பகுதிகளில் உள்ள 60 வார்டுகளில் இருந்து தினசரி 350 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு வெண்டிபாளையம், வைராபாளையம் பகுதிகளில் உள்ள உரக்கிடங்குகளில் உரமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. வார்டு பகுதிகளில் உள்ள குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் சேகரித்து வரும் நிலையில் தனியார் நிறுவனங்களில் சேரும் கழிவுகளை அகற்ற கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி பேக்கரிகளுக்கு 300 ரூபாயும், பேக்கரி தயாரிப்பு நிறுவனங்களுக்கு 500 ரூபாயும், இதர நிறுவனங்களுக்கு 2 ஆயிரம் ரூபாயும், ஹார்டுவேர் சிறிய கடைகளுக்கு 250 ரூபாயும், பெரிய கடைகளுக்கு 750 ரூபாயும் கட்டணமாக இவ்வாண்டு முதல் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் டிபன் ஸ்டால்களுக்கு 100 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், மெஸ்களுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், உணவு விடுதிகளுக்கு 400 ரூபாயில் இருந்து ஆயிரம் ரூபாயாகவும், உணவுடன் கூடிய தங்கும் விடுதிகளுக்கு 500 ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், குளிர்பானம் மற்றும் பழச்சாறு கடைகளுக்கு 250 ரூபாயில் இருந்து 500 ரூபாயாகவும், பெரிய காய்கறி கடைகள், பழமுதிர் நிலையங்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களுக்கு ஆயிரம் ரூபாயில் இருந்து 3 ஆயிரம் ரூபாயாகவும், சிறிய மளிகை கடைகளுக்கு 200 ரூபாயில் இருந்து 300 ரூபாயாகவும், சிறிய காய்கறி கடைகள், பழமுதிர் நிலைய்களுக்கு 500 ரூபாயும் கட்டணமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ஆனால் இந்த சேவை கட்டணம் அதிக அளவில் உயர்த்தப்பட்டுள்ளதால் ஓட்டல்கள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்களுக்கு எவ்வித கட்டணமும் நிர்ணயிக்கப்படவில்லை. அதிக அளவில் உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்து விட்டு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.