மாலை மலர் 09.10.2013
குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை
![குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை குப்பையில் இருந்து மின்சாரம் எடுக்கும் புதிய திட்டம் விரைவில் வருகிறது: தமிழக அரசு துரித நடவடிக்கை](http://mmimages.maalaimalar.com/Articles/2013/Oct/0232597b-0866-4cb2-98bc-70390c49685c_S_secvpf.gif)
பல்வேறு புதிய திட்டங்களை கொண்டு வந்தாலும், சமீபத்தில் முதல்-அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்ட அம்மா உணவகங்கள் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு ஏழைகூட இனி இரவில் பசியோடு படுக்கைக்கு செல்லத்தேவையில்லை என்ற நிலையை மாநகராட்சி பகுதிகளில் ஏற்படுத்தும் முனைப்பில் இந்த திட்டம் முழுவீச்சில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மக்கள் கூடும் பகுதிகளில் அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு உள்ளன. ஆனால் ஏழை, எளிய மக்கள் அதிகமாக வந்து செல்லும் அரசு ஆஸ்பத்திரிகளில், நல்ல உணவு கிடைக்கும் வசதி இல்லை.
அங்கு சிகிச்சைக்காக வருபவர்கள், உணவுக்காக வெளியே செல்ல வேண்டியதுள்ளது. ஆஸ்பத்திரி வளாகத்துக்கு அருகே விற்கப்படும் உணவுகளின் தரமும், சுகாதாரமும் குறைவாகவே உள்ளன. இந்த நிலையை மாற்றுவதற்காக சென்னையில் உள்ள அனைத்து அரசு ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்களை திறப்பதற்கு முதல்-அமைச்சர் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து உயர் அதிகாரியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-
சென்னையில் உள்ள அனைத்து ஆஸ்பத்திரிகளிலும் அம்மா உணவகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மாத இறுதியில் அவை திறக்கப்படும். மற்ற அம்மா உணவகங்களில் கிடைக்கும் அதே உணவுகளை இதிலும் பெறலாம்.
இடம் பெயர்ந்து வருகிறவர்கள், கூலித்தொழிலாளிகள் ஏராளமானோர் மாநகராட்சிகளில்தான் அதிகம் உள்ளனர். எனவேதான் மாநகராட்சிகளில் அம்மா உணவக திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.
சென்னையில் கொடுங்கையூர், பெருங்குடி ஆகிய இடங்களில் அதிகம் குப்பை கொட்டப்படுகிறது. குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசுமுயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அதுதொடர்பாக டெண்டர் விடுக்கப்பட்டது. அதில் பங்கேற்கும் நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளை மதிப்பிடும் பணி நடைபெறுகிறது. இன்னும் இரண்டு மாதங்களில் இந்தப் பணி நிறைவு பெறும். அதன்பின்னர் அந்த திட்டத்துக்கு முழு வடிவம் கொடுத்து, அதை நடைமுறைப்படுத்துவோம்.
பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கும் பணி, மாநகராட்சிகள், நகராட்சிகளில் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இந்த சாலையும் மற்ற சாலைகளின் தரத்துக்கு இணையானதுதான். இந்த சாலைகளை அமைக்கும்போது அதில் 10 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் உபயோகிக்கப்படுகிறது.
எனவே சாலை அமைப்பதற்காக வாங்கப்பட வேண்டிய உபபொருட்கள் 10 சதவீதம் மீதமாகிறது.
தெருநாய் தொல்லைகள் குறித்த புகார்கள் உடனுக்குடன் கவனிக்கப்படுகின்றன. இவற்றை எப்படி நடத்த வேண்டும் என்றுள்ள விதிகளின்படி அவற்றை நடத்துகிறோம். தொல்லை தரும் நாய்களை இடமாற்றம் செய்வது, ஆபரேஷன் செய்வது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.
அதுதவிர நாய் வண்டிகள் வாங்கிக்கொடுப்பது, நாய் பிடிப்பவர்கள், கால்நடை டாக்டர்களுக்கு பயிற்சி அளிப்பது போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் சூரிய மின்சக்தியை பயன்படுத்துவது தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பரிசீலித்து வருகிறார். அதற்கான மின் மீட்டர் அமைப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டதும் திட்டம் அமலுக்கு வரும்.
தமிழகத்தில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் தேவையாக உள்ளது. கோடைகாலங்களில் ஆற்று நீர் போன்ற மற்ற ஆதாரங்களில் இருந்து குடிநீர் கிடைக்காவிட்டாலும், கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் குடிநீரை சப்ளை செய்யலாம்.
அந்த வகையில் முதல்-அமைச்சரின் உத்தரவின் பேரில் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் நெமிலியில் 150 எம்.எல்.டி. அளவு கொண்ட நிலையமும், நெமிலி வடக்கில் 400 எம்.எல்.டி. திறன் கொண்ட நிலையமும் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இவை தவிர ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய இடங்களிலும் தலா 100 எம்.எல்.டி. திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிப்பதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் இன்னும் 3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வந்துவிடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.