Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திடகழிவுகளை முறையாக செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் மு.கருணாகரன் பேச்சு

Print PDF

தினத்தந்தி            04.11.2013

திடகழிவுகளை முறையாக செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு கலெக்டர் மு.கருணாகரன் பேச்சு

திட மற்றும் திரவ கழிவுகளை முறையாக செயல்படுத்த ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. என்று கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

கண்காணிப்புக்குழுக் கூட்டம்

நெல்லை மாவட்ட அளவிலான திட மற்றும் திரவ கழிவு மேலாண்மை கண்காணிப்புக் குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று முன்தினம் நடந்தது. கலெக்டர் மு.கருணாகரன் தலைமை பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:–

ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு

தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களை தூய்மையான கிராமமாக மாற்றிடும் வகையில் திட மற்றும் திரவ கழிவுகளை முறையாக செயல்படுத்தும் பணிகளுக்காக தமிழக முதல்–அமைச்சர் 2013–2014ம் நிதி ஆண்டிற்கு ரூ.150 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்கள். நெல்லை மாவட்டத்தில் இந்த திட்டத்தினை செயல்படுத்துவதற்காக மாவட்ட அளவில் கலெக்டரை தலைவராக கொண்ட கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது.உறுப்பினர் மற்றும் ஒருங்கிணைப்பாளராக மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செயல்படுவார்.

மாவட்ட பஞ்சாயத்து தலைவர், மாநகராட்சி ஆணையாளர், கோட்ட வன அலுவலர், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர், மகளிர் திட்ட அலுவலர், வேளாண்மைத் துறை இணைஇயக்குநர், புதுவாழ்வுத்திட்ட மாவட்ட திட்ட மேலாளர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட தொழில் மைய பொது மைய மேலாளர், கிராம பஞ்சாயத்து உதவி இயக்குநர், மாவட்ட முன்னோடி வங்கி அலுவலர், நகரபஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர், உள்பட அலுவலர்கள், சங்கரன்கோவில், செங்கோட்டை நகரசபை ஆணையாளர்கள் ஊக்கிரன்கோட்டை, சிவந்திபுரம், ஆனைகுளம், கீழவெள்ளக்கால், சவுந்திரபாண்டியாபுரம் ஆகிய கிராம பஞ்சாயத்து தலைவர்கள், முன்னீர்பள்ளம், மணப்படைவீடு ஆகிய ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு ஊக்குனர்கள், ஏ.ஐ.ஆர்.டி. தொண்டு நிறுவனம், ஸ்கார்ட் நிறுவன நிர்வாக அறங்காவலர் ஆகிய 28 பேர் அடங்கிய உறுப்பினர்களை கொண்டு செயல்படுகிறது.

மீத்தேன் வாயு தயாரித்தல்

நமது மாவட்டத்தில் முதற்கட்டமாக நல்லூர் மற்றும் சிவந்திபுரம் கிராம பஞ்சாயத்துகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அனைத்துக் கிராமங்களும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் பராமரித்திடவும், நிலையான நீடித்த திடக்கழிவு மேலாண்மை அமைப்பினை கிராமங்களில் உருவாக்கிடவும், திடக்கழிவுகளை மறுசுழற்சி செய்து குப்பைகள் அற்ற கிராமங்களாக உருவாக்கிடவும், பிளாஸ்டிக் மற்றும் குப்பைகளை சேரமால் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்வதும், இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

சுற்றுப்புறச்சூழலை பாதுகாப்பதில் கவனம் செலுத்தி கிராமங்கள் தோறும் மேம்படுத்தப்பட்ட சுகாதாரத்தை ஏற்படுத்த வேண்டியது கட்டாயமாகும். குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிப்பது பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்வது போன்ற நடவடிக்கைகளால் கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் கழிவுகளை கொண்டு அடுப்பு எரிக்க எரிவாயு உருவாக்குதல், பாதுகாப்பாக மீத்தேன் வாயு தயாரித்தல், போன்ற நடவடிக்கை மூலமாகவும் சுகாதாரத்தை மேம்படுத்தலாம். இதன்மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கிடலாம்.

இந்த திட்டங்களை செயல்படுத்துவது திட்டமிடுவது பஞ்சாயத்து நிர்வாகத்தின் பொறுப்பாகும். திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்த்திட வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் தனிநபர் கழிப்பறை அமைத்திட வேண்டும்.

தனிநபர் கழிப்பறை

தனிநபர் கழிப்பறை அமைக்க பயனாளிகள் ரூ.900 மட்டும் செலுத்தினால், மத்திய, மாநில நிதி உதவியுடன் மான்யத்தில் ரூ.11 ஆயிரம் மதிப்பில் தனிநபர் கழிப்பிட வசதி ஏற்படுத்திட அரசு வழிவகை செய்துள்ளது. இதனை முழுமையாக கிராம மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கிராம மக்களிடையே சுற்றுச்சூழல் மாசுபடுவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கிராமமக்களை சுத்தமாக பராமரிக்க செய்தல் வேண்டும் திரவ மற்றும் திடக்கழிவு மேலாண்மை பணிகளை கண்காணித்து திட்டத்தினை வெற்றிபெற செய்வது உள்ளாட்சி அமைப்புகளின் கடமையாகும்.

இவ்வாறு கலெக்டர் மு.கருணாகரன் கூறினார்.

கலந்து கொண்டவர்கள்

கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.விஜயகுமார், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் பா.நாராயணபெருமாள், மாநகராட்சி ஆணையாளர் த.மோகன், கோட்ட வன அலுவலர் பேரின்ப ஜெபகுமார், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் அசன் இப்ராகீம், மகளிர் திட்ட அலுவலர் குருநாதன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் க.சவுந்திரராஜன், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் மாரியம்மாள், முன்னோடி வங்கி அலுவலர் அழகர்சாமி, கிராம பஞ்சாயத்துகளின் உதவி இயக்குநர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.