தினத்தந்தி 05.11.2013
3 நாட்களில் 2,025 டன் குப்பைகள் சேகரிப்பு மாநகராட்சி நடவடிக்கை
![](http://www.dailythanthi.com/dt/sites/default/files/newsarticleimages/mdu_0411_5.jpg)
மதுரை மாநகரில் 3 நாட்களில் மொத்தம் 2,025 டன் குப்பைகளை மாநகராட்சி சேகரித்து உள்ளது.
வெள்ளக்கல் கிடங்கு
மதுரை மாநகரில் உள்ள 100 வார்டுகளில் தினமும் 400 முதல் 500 டன் வரை குப்பைகள் தினமும் சேகரிக்கபடுகிறது. பல்வேறு வாகனங்கள் சேகரிக்கப்படும் இந்த குப்பைகள் வெள்ளக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. அங்கு இந்த குப்பைகள் தரம் பிரித்து உரமாக தயாரிக்கப்படுகிறது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 3 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்து 25 டன் குப்பைகள் சேகரிக்கப்பட்டுள்ளது.
178 வாகனங்கள்
மதுரை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
மதுரை மாநகராட்சி நான்கு மண்டலத்திற்குட்பட்ட 100 வார்டுகளில் இருந்து 90 டம்பர் பிளெசர்கள் 11 டிப்பர் லாரிகள் 5 காம்பெக்டர்கள், 37 டிராக்டர்கள் மற்றும் 37 ஆட்டோக்கள் என மொத்தம் 178 வாகனங்கள் மூலம் குப்பைகள் சேகரிக்கப்பட்டு வெள்ளைக்கல்லில் உள்ள திடக்கழிவு மேலாண்மை மையத்தில் உரம் தயாரிக்க கொட்டப்பட்டு வருகிறது.
2025 டன் குப்பைகள்
தீபாவளி திருநாளை முன்னிட்டு மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் 2–ந் தேதியன்று 482 டன் குப்பைகளும், 3ந் தேதியன்று 537 டன் குப்பைகளும் நேற்று (4–ந் தேதியன்று) 1,006 டன் குப்பைகளும் என மூன்று நாட்களில் மட்டும் 2,025 டன் குப்பைகள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.