தினமணி 09.11.2009
எங்கே திடக்கழிவு மேலாண்மை?
கோவை, நவ. 8: கோவையை குப்பையில்லா நகரமாக மாற்றும் வகையில் செயல்படுத்தப்பட்ட திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தை அமல்படுத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உருவாகியுள்ளன.
கோவை நகரில் தினமும் 800 டன் குப்பைகள் வெளியேறுகின்றன. இவற்றில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிப்பதிலேயே பெரும் பிரச்னையை மாநகராட்சி எதிர்கொள்கிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் முதல்படியே, குப்பைகள் சேரும் இடத்திலேயே தரம் பிரிப்பதுதான்.
ஜவஹர்லால் நேரு தேசிய புனரமைப்புத் திட்டத்தில் ரூ.90 கோடியில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. வீடுகளில் சேரும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்க 10 லிட்டர் கொள்ளளவு கொண்ட 4 லட்சத்து 58 ஆயிரம் குப்பைக் கூடைகள் பொதுமக்களுக்கு இலசமாக வழங்கப்பட்டன. மக்கும் குப்பைக்கு பச்சை கூடை, மக்காத குப்பைக்கு வெள்ளை கூடை என பிரித்துப் போடும்படி பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், பெரும்பாலான வீடுகளில் குப்பைக் கூடைகள் வேறு பயன்பாட்டில் இருக்கின்றன. இதுதவிர, வீடுகளில் இருந்து குப்பைகளைச் சேகரிக்க 6 குப்பைத் தொட்டிகளுடன் கூடிய குப்பை வண்டிகள் துப்புரவாளர்களுக்கு வழங்கப்பட்டன.
பொதுமக்கள் கொட்டும் குப்பைகளை துப்புரவாளர்களும் முறையாக பச்சை, வெள்ளை குப்பைத் தொட்டிகளில் எடுத்துச் செல்வதில்லை. தள்ள முடியாத அளவுக்கு மோசமான பேரிங்குகளுடன் குப்பை வண்டிகள் இருப்பதால் பெரும்பாலான வார்டுகளில் அவற்றை துப்புரவாளர்கள் பயன்படுத்துவதில்லை.
சில வார்டுகளில் துப்புரவாளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தள்ளுவண்டிகள் இல்லை. இன்னும் சில வார்டுகளுக்கு தேவைக்கு அதிகமாக வண்டிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த வண்டிகள் பயன்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
முதன்மைச் சேகரிப்பிலேயே பல்வேறு குளறுபடிகள் இருப்பதால், மாநகராட்சியின் பெரும்பாலான வார்டுகளில் குப்பைகளை அகற்ற முடியாத நிலை உள்ளது. அதோடு, பொதுமக்களும் சில இடங்களில் சாக்கடைகளுக்குள் குப்பைகளைக் கொட்டி விடுகின்றனர். இதனால் சாக்கடையில் கழிவுநீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்களைப் பரப்புவதற்கும் காரணமாக அமைந்துவிடுகின்றன.
திடக்கழிவு மேலாண்மை திட்டம் என்பது கோவை மாநகராட்சியில் ஜவஹர்லால் நேரு நகர புனரமைப்புத் திட்டம் வருவதற்கு முன்பிருந்தே பேசப்பட்டு வருகிறது. குப்பையில்லா நகரமாக கோவை மாறுவது எப்போது?... என்ற கேள்விக்குத்தான் இன்னும் பதில் கிடைக்கவில்லை.