தினமணி 07.01.2010
குப்பையில் இருந்து மின்சாரம்: திட்டம் செயல்படுத்துவதற்கான இடம் குறித்து அமெரிக்க பேராசிரியர் ஆய்வு
திருப்பூர், ஜன.6: சுமார் ரூ.1,400 கோடியில் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்குத் தேவையான இடம் குறித்து அமெரிக்க பல்கலை. பேராசிரியர்கள் புதன்கிழமை திருப்பூரில் ஆய்வு மேற்கொண்டனர்.
÷உலக வங்கி நிதியுதவி 90 சதவீதம் மற்றும் தனியார் பங்களிப்பு 10 சதவீதத்துடன் திருப்பூரில் குப்பைகளில் இருந்து மின்சாரம் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது குறித்து அமெரிக்காவைச் சேர்ந்த ஏல் பல்கலை. பேராசியர்கள் சார்லஸ் ஏலென் ஜோன், சீனிவாசன் ஆகியோர் திருப்பூர் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தொழில்துறையினருக்கு விரிவான விளக்கம் அளித்தனர்.
÷அதன் தொடர்ச்சியாக, இத்திட்டம் குறித்தும், திட்டத்துக்கு தேவையான இடம், குப்பைகள் உள்ளிட்டவை குறித்து மாநகராட்சி மேயர் க.செல்வராஜ், ஆணையர் ஆர்.ஜெயலட்சுமி ஆகியோரிடம் விரிவாக அறிவுறுத்தப்பட்டது. இவற்றை கேட்டறிந்த மாநகராட்சி நிர்வாகத்
தினர் இத் திட்டத்துக்கான நிலமும், குப்பைகளும் அளிப்பதாக உறுதியளித்தனர்.
÷இதையடுத்து, திருப்பூரில் நாளொன்றுக்கு கிடைக்கும் குப்பைகள், திட்டக் கூடம் அமைய உள்ள இடத்துக்கும் கழிவுநீர் கிடைக்கும் இடத்துக்கும் உள்ள தூரம் உள்ளிட்டவை குறித்து ஒரு வாரத்துக்குள் விரிவான அறிக்கை தயாரித்து அளிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்திடம் ஆய்வுக் குழுவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
÷இதைத் தொடர்ந்து திட்டத்துக்கு தேவையான இடம் குறித்து இடுவாய், இடுவம்பாளையம், கோயில்வழி பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அருள்புரம், கரைப்புதூர் சாயக்கழிவு பொதுசுத்திகரிப்பு நிலையங்களையும், கோயில் வழி திடக்கழிவு உரத் தொழிற்சாலையையும் பார்வையிட்டனர். இதன் தொடர்ச்சியாக, திட்டத்துக்கான முதல் கட்ட உதவி கோரி மும்பையில் உள்ள இந்திய பைனான்ஸ் கார்ப்ரேசன், தமிழ்நாடு பைனான்ஸ் கார்ப்பரேசன் நிறுவனங்களுடன் வியாழக்கிழமை பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
÷திருப்பூரில் நடந்த ஆய்வின் போது மாநகராட்சி நகர்நல அதிகாரி கே.ஆர்.ஜவஹர்லால், முயற்சி மக்கள் அமைப்பு நிர்வாகிகள் சிதம்பரம், பரமசிவம் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.