தினமணி 10.01.2010
குப்பையிலிருந்து செல்வம் திட்டம் துவக்கம்
பெ.நா.பாளையம், ஜன. 9: தனியார் நிறுவனப் பங்களிப்புடன் சுகாதாரத்தை மேம்படுத்தும் வண்ணம் குப்பையிலிருந்து செல்வம் என்ற திட்டம் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இப்பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒருபகுதியாக தேக்கம்பட்டியிலுள்ள ஐடிசி என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து இத் திட்டத்தை பேரூராட்சி நடைமுறைப்படுத்துகிறது. இதன்படி இந்நிறுவனமானது பொதுமக்களிடம் மக்கும் குப்பைகளை கிலோவிற்கு ரூ.2 என்ற வீதத்தில் பெற்றுக் கொள்கிறது.
குப்பைகளை சேகரிக்க ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு பை தரப்படுகிறது. இதில் அவர்கள் மறுசுழற்சி செய்யக்கூடிய காகிதப் பைகள்,சோப்புகவர்,பிஸ்கட் கவர்,டூத் பிரஸ்,பாலீதீன் பைகள்.தண்ணீர் பாட்டில்கள் போன்ற பல பொருட்களை சேமிக்க வேண்டும்.ó அதனை 10 நாட்களுக்கு ஒருமுறை இந்நிறுவனத்தில் பெற்றுக் கொண்டு அதற்கான தொகையையும் வழங்குவர்.
இதனை, வெள்ளிக்கிழமை ராமகிருஷ்ணா நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேருராட்சித் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று பிளாஸ்டிக் பைகளை வழங்கி துவக்கி வைத்தார்.
பேரூராட்சி செயல் அலுவலர் செüந்திரம், கவுன்சிலர்கள் சிவராஜ்,முருகேசன்,திலகா ரகுநாதன்,கோவிந்தராஜ்,சுகாதார நல அதிகாரி பரமசிவம் மற்றும் ஐடிசி நிறுவனத்தின் பொருட்கள் துறை மேலாளர் பெரோஸ் முன்ஷி உள்பட பலர் பங்கேற்றனர்.
இது குறித்து அருண்குமார் கூறியது: இங்கு 18 வார்டுகளிலும் சேர்த்து தினமும் 3டன் குப்பை சேகரிக்கப்படுகிறது.இதில் 30 சதவீதம் மக்கும் குப்பை உள்ளது.இதனை ஐடிசி நிறுவனம் பெற்றுக்
கொள்கிறது. முதற்கட்டமாக 2500 வீடுகளில் இது நடைமுறைபடுத்தப்படுகிறது. தொடர்ந்து இரண்டு கட்டமாக இன்னும் 7500 குடும்பங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும். இதன் மூலம் நகரில் குப்பைகள் தேங்குவது குறைய வாய்ப்பு ஏற்படும் என்றார்.