தினமலர் 11.02.2010
மக்கும், மக்காத குப்பைகளை பிரித்தெடுப்பதில் சுணக்கம்
போடி: சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் பணியில் போடி நகராட்சி நிர்வாகம் 'சுணக்கம்' காட்டி வருவதால் சுகாதார கேடு ஏற்படுகிறது.
அரசு உத்தரவு படி போடி நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்பு வரை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களை கொண்டு ஊர்வலங்கள் நடத்தப்பட்டும், துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டது. தெருக்கள் தோறும் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை பிரித்தெடுக்கும் வகையில் தனித்தனி தொட்டிகளும் அமைக்கப்பட்டன. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், ரோட்டோர கடை வைத்திருப்பவர்கள் பாலித்தீன் பைகளை பயன்படுத்தக் கூடாது எனவும், மீறுவோறுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டிருந்தது. குப்பைகளை சேகரிக்கும் வகையில் துப்புரவு பணியாளர்களுக்கு தனித்தனி தொட்டிகள் கொண்ட வண்டிகள் தரப்பட்டது. தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதில் நகராட்சி நிர்வாகம் மெத்தனம் காட்டி வருவதால் சுற்றுச்சூழலை பாதிக்கும் வகையில் பிளாஸ்டிக் குப்பைகளின் சங்கமமாக போடி நகராட்சி பகுதி விளங்குகிறது.இதனை அகற்றும் வகையில் துப்புரவு பணிகள் நடைபெறாததினால் சாக்கடை கால்வாய்கள் அடைத்துக்கொண்டு கழிவுநீர் செல்ல வழியில்லாமல் பொதுமக்களுக்கு சுகாதாரகேடு ஏற்படுகிறது.சுற்றுச்சூழல் பாதிப்பை தடுக்கும் வகையில் பிளாஸ்டிக் கழிவு பொருட்களை அகற்றவும், நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாடுகள் குறித்து கண்காணித்தும் போடி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.