தினமணி 04.03.2010
குப்பைகளை மக்கவைக்க புதிய தொழில்நுட்பம்
சிவகாசி, மார்ச் 3: சிவகாசி நகராட்சியில் குப்பைகளை மக்கவைப்பதற்குப் புதிய தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது என நகர்மன்றத் துணைத் தலைவர் ஜி.அசோகன் புதன்கிழமை தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தின் கீழ் ரூ.24 லட்சம் மதிப்பீட்டில் இதற்கானப் பணிகள் நடைபெற உள்ளன என்றார்.
சிவகாசி நகராட்சிக்கு சொந்தமான உரக் கிடங்கு சிவகாசி-சாத்தூர் சாலை பாரைப்பட்டியில் 5.36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. நகராட்சியில் 175 துப்பரவுப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். குப்பைத் தொட்டிகளை எடுத்துச் செல்லும் லாரி 3, டிராக்டர் 4, லாரி 3 ஆ க 10 வாகனங்கள் உள்ளன. தினசரி 45 மெட்ரிக் டன் குப்பைகள் எடுக்கப்படுகிறது.
தற்போது இந்த குப்பைகள் பாரைப்பட்டியிலுள்ள குப்பைக் கிடங்கில் அப்படியே கொட்டப்படுகிறது. தற்போது குப்பைகளை ஒரே இடத்திற்கு கொண்டு செல்ல ரூ. 9 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரக்கிடங்கில் போர்வெல், தண்ணீர் தொட்டி அமைக்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உரக் கிடங்கில் குப்பையை உலர்த்துவதற்கு, 50 மீட்டர் நீளம், 6 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு மேடை ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
இப்பணி நிறைவு பெற்றதும், பிரித்து எடுக்கப்பட்ட குப்பைகள் உலர்த்தும் மேடையில் போடப்பட்டு, அதன் மீது தண்ணீர் ஊற்றப்பட்டு. அதிலிருந்து வெளியேறும் அசுத்த நீர், இயந்திரம் மூலம் சுத்தப்படுத்தப்பட்டு, உரக்கிடங்கினைச் சுற்றிலும் வைக்கப்படவுள்ள மரக் கன்றுகளுக்கு ஊற்றப்படும். உலர் மேடையில் 30 நாள்கள் தொடர்ந்து குப்பைகளைக் கொட்டி தண்ணீர் ஊற்றி, 30 நாள் சென்றதும், மற்றொரு மேடையில் குப்பைகளைப் போட்டு தண்ணீர் ஊற்றப்படும். 2-வது மேடையிலுள்ள குப்பை 30 நாள் ஆனதும், முதல் மேடையில் உள்ள குப்பைகள் நன்றாக மக்கிவிடும்.
இந்த மக்கிய குப்பைகள் விவசாயிகளுக்கு விற்கப்படும் என்றார். இத் திட்டம் விரைவில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அசோகன்.