தினமணி 05.03.2010
குப்பையிலிருந்து மின்சாரம்: திட்டத்தை செயல்படுத்த கவுன்சிலர் கோரிக்கைகடையநல்லூர், மார்ச் 4: கடையநல்லூர் நகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, உறுப்பினர் ராமநாதன் கோரிக்கை விடுத்தார். இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்வதாக ஆணையர் பதிலளித்தார்.
கடையநல்லூர் நகர்மன்றக் கூட்டம், தலைவர் இப்ராஹிம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆணையர் அப்துல்லத்தீப், துணைத் தலைவர் காளிராஜ், பொறியாளர் அய்யனார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், கடையநல்லூர் நகராட்சியிலுள்ள தெருவிளக்கு, குடிநீர் உள்ளிட்ட பயன்பாட்டுக்காக செலவிடப்படும் மின் செலவு ஆண்டுக்கு ரூ. 32.20 லட்சம் ஆகிறது. அதேநேரம், கடையநல்லூர் நகராட்சியில் நாளொன்றுக்கு சுமார் 24.2 டன் குப்பை கிடைக்கிறது. 10 டன் குப்பை மூலம் சுமார் 1,200 யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
எனவே, நகராட்சியில் குப்பை மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ. 62.40 லட்சம் வருவாய் கிடைக்கும் என, உறுப்பினர் ராமநாதன் தெரிவித்தார். இதை மற்ற உறுப்பினர்களும் வரவேற்றனர்.
ஆணையர்: இது நல்ல திட்டம். இதுகுறித்து அரசுக்கு உரிய கருத்துரு அனுப்பி வைக்கப்படும்.
நகராட்சி அலுவலர்கள் நகர்மன்ற உறுப்பினர்களை மதிப்பதில்லை என, உறுப்பினர்கள் பாதுஷா, பாலசுப்பிரமணியன் ஆகியோர் கடும் புகார் தெரிவித்தனர். இதுகுறித்து நகராட்சி அலுவலர்களிடம் பேசியுள்ளேன், பொதுமக்கள் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்களிடம் அலுவலர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளேன் என்றார் ஆணையர்.
மரியாதை கொடுக்க தெரியாத அலுவலர்கள் இடமாறுதல் பெற்றுச் செல்லுமாறு, தலைவர் கடிந்து கொண்டார். வாரச்சந்தையிலுள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என, ராமநாதன், மைதீன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். மேலும் வாரச்சந்தையை செயல்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர். நடவடிக்கை எடுக்கப்படும் என, ஆணையர் பதிலளித்தார்.