தினமணி 01.04.2010
குப்பையை உரமாக்கும் திட்டத்தை செயல்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி திட்டம்
காஞ்சிபுரம், மார்ச் 31: குப்பையை உரமாக்கும் திட்டத்தை தீவிரமாக செயல்படுத்த காஞ்சிபுரம் நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்கான உரத்திடலை நிறுவ சென்னை நிர்வாக இயக்குநருக்கு அனுமதி கோரவும் நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
÷காஞ்சிபுரம் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இக் கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் மகாலட்சுமிதேவி மற்றும் பல்வேறு அதிகாரிகள் பங்கேற்றனர்.
÷காஞ்சிபுரம் நகரில் தினமும் 80 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரம் ஆகின்றன. இக் குப்பைகளில் இருந்து ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தி மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து மறு சுழற்சி செய்தல், உரத் திடலை நிறுவி இயக்கி ஒப்படைத்தல் ஆகிய பணிகளை செய்ய தனியார் நிறுவனம் ஒன்று நகராட்சியிடம் அனுமதி கோரியுள்ளது.
÷இது குறித்து இந்த நிறுவனத்தின் அறிக்கையை நகராட்சி நிர்வாக இயக்குநருக்கு அனுப்புவது என்று நகர்மன்றக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
÷பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை செய்யும் சட்டத்தை தீவிரமாக அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. பொது இடங்களில் புகைப்பிடிப்பவர்களிடம் ரூ.200 அபராதம் வசூலிக்கவும், பள்ளிகள், கல்வி நிலையங்களில் சுற்றிலும் 100 அடி தூரத்துக்கு புகையிலை சம்பந்தப்பட்ட பொருள்கள் விற்பனை செய்யக் கூடாது என்ற விதியும் தீவிரமாக அமல்படுத்த துண்டறிக்கைகள் அச்சிட்டு வெளியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
÷குடிநீர், சாலை அமைத்தல், கழிப்பிடம் கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
÷அப்போது பாமக கவுன்சிலர் சாந்தி, தீர்மானம் அதிகம் நிறைவேற்றப்படுகிறது. அதற்கு தகுந்தாற்போல் பணிகள் நடைபெறவில்லை என்றார். அப்போது குறுக்கிட்ட அதிகாரிகள் எந்தப் பகுதியில் என்று குறிப்பிட்டு கூறினால் அவை சரி செய்யப்படும் என்றனர்.
÷இறந்தவர்களின் வாரிசுகளுக்கு வேலை அளிப்பதில் பதிவு மூப்பு பின்பற்றப்பட வேண்டும் என்றும், விளம்பரப் பலகைகளை அகற்றும்போது பாரபட்சம் காட்டக் கூடாது என்றும் காங்கிரஸ் கவுன்சிலர் சிகாமணி வலியுறுத்தினார்.