தினமலர் 13.04.2010
திடக்கழிவு உரத்தில் காலிபிளவர்! கலக்குது கூடலூர் பேரூராட்சி
பெ.நா.பாளையம் : திடக்கழிவில் தயாரிக்கப் பட்ட கலவை உரத்தை பயன்படுத்தி காலிபிளவர் உற்பத்தி செய்யும் பணி, கூடலூர் பேரூராட்சியில் துவங்கியது. இப்பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் பல்வேறு நிறுவனங்கள், தொழிற்சாலைகளிலிருந்து மாதம் தோறும் ஏழு 'டன்' குப்பை சேகரிக்கப்படுகிறது. இவை மட்கும், மட்காத குப்பையாக தரம் பிரிக்கப்படுகிறது. மட்கும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், மட்காத குப்பைகளை 'பிளாஸ் டிக்' பைகளில் அடைத்து மறுசுழச்சி செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட 'கம்போஸ்ட்' பூங்காவிலிருந்து மாதம் ஒன்றுக்கு மூன்று டன் இயற்கை உரம், மண்புழு உரம், 'பஞ்சகாவ்யா' தயாரிக்கப்பட்டு, விவசாயிகளுக்கும், தனியாருக்கும் விற் பனை செய்யப்படுகிறது. தவிர கூடலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் வீட்டுக்கு பின்புறம் சமையல் கழிவுகளை கொண்டு உரம் தயாரிக்கும் முறையும் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுவினரை கொண்டு இயற்கை உரங்களை பயன்படுத்தி வெண்டை, முள்ளங்கி உள்ளிட்ட காய்கறிகள் பயிரிட்டு விற்பனை செய்யும் பணி கடந்த ஆண்டில் துவங்கியது. சில மாதங்களுக்கு முன் கலவை உரம், வைக்கோல் ஆகியவற்றை கொண்டு காளான் உற்பத்தி நடந்தது. தற்போது, காலிபிளவர் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. காலிபிளவர் விற்பனையை கூடலூர் பேரூராட்சி தலைவர் ரங்கசாமி, செயல் அலுவலர் கல்யாணசுந்தரம் ஆகியோர் துவக்கி வைத்தனர். படிப்படியாக அனைத்து வகையான காய்கறிகளையும் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேரூராட்சி நிர்வாகம் தெரிவித்தது.