தினமலர் 13.04.2010
திடக்கழிவு மேலாண்மை திட்டம் பிரான்ஸ் மாணவிகள் நேரில் ஆய்வு
குளித்தலை: குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மையை பிரான்ஸைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் நேரில் பார்வையிட்டு தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர். குளித்தலை நகராட்சி மூலம் பல லட்சம் ரூபாய் மதிப்பில் சத்தியமங்கலத்தில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டு, நகராட்சியில் சேரும் குப்பையை தரம் பிரித்து துப்புரவு பணியாளர் மூலம் இயற்கை உரம் தரம் பிரிக்கப்படுகிறது. பொதுமக்களிடம் பெறப்பட்ட குப்பை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு குறைந்தவிலையில் விற்பனை செய்யப்படுகிறது. மாநிலத்தில் நகராட்சி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டம் குளித்தலை நகராட்சியில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை செயல்படுத்தப்படுவதை இயற்கை விவசாயிகள், மத்திய, மாநில அரசு அதிகாரிகள் முன்மாதிரியாக கொண்டு பார்வையிடுகின்றனர். மேலும், மாநிலத்தில் பல்வேறு நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை தொழில்நுட்பம் செயல்முறைகளை குறித்து நகராட்சி தலைவர் அமுதவேல், கமிஷனர் தனலட்சுமி, சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் ஆகியோர் நேரில் செயல்முறை விளக்கம் அளித்துவருகின்றனர். சிறப்பாக செயல்படும் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை கழிவு மற்றும் உரங்களை தஞ்சாவூர் சாஸ்தா பொறியியல் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள் நேரில் பார்த்து தொழில்நுட்பம் கையேடுகளை பெற்றுச் சென்றனர். இன்டர்நெட் மூலம் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்த்த இயற்கை விஞ்ஞானிகள் பலர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மூன்று கல்லூரி மாணவிகள் குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பார்வையிட்டு, செயல்முறைவிளக்கம், தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.