தினமலர் 06.12.2010
குப்பை கிடங்கிற்கு கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்க திட்டம்
கம்பம் : கம்பம் நகராட்சி பகுதியில் சேகரமாகும் குப்பைகளை கொட்ட கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.கம்பம் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.விரிவாக்க பகுதிகளும் அதிகரித்து வருகிறது. பணியாளர்கள் பற்றாக்குறையால் இந்த பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளுவது, பிரித்தெடுப்பது,குப்பை கிடங்கில் சேர்ப்பது சுகாதார பிரிவினருக்கு சிரமமாக உள்ளது. குப்பைகள் கொட்டுவதற்காக நகராட்சிக்கு ஆங்கூர்பாளையம் ரோட்டில் 4 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த கிடங்கு நிரம்பி, அவற்றை பராமரிப்பு செய்வதில் கடந்த பல ஆண்டுகளாக பிரச்னை இருந்து வருகிறது.மேலும் அந்த இடத்தில் பொது மயானமும் அமைக்கப்பட்டுள்ளது. பாதாள சாக்கடை திட்டத்திற்கு, டிரீட்மெண்ட் பிளான்ட் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
எனவே குமுளி ரோட்டில் 4.5 ஏக்கர் நிலம் வாங்கி நவீன குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டது. அங்கு மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கப்படுகிறது. இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் குப்பைக் கிட்டங்கி அமைக்க இடம் கிடைக்காது என்பதால், இப்போதே இடம் வாங்க நகராட்சி முடிவு செய்துள்ளது. கூடுதலாக 4.5 ஏக்கர் நிலம் வாங்கினால் தான், சேகரமாகும் குப்பைகளை பராமரிக்க முடியும் என்று நகராட்சி கூறுகிறது.அரசு நிர்ணய விலைக்கு இடம் வாங்க முடியாதென்றும், கூடுதலாக விலை நிர்ணயம் செய்து, நகராட்சி பொதுநிதியில் இருந்து வாங்கினால் தான் முடியும் என்றும் கவுன்சிலர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். தற்போது நகராட்சி நிர்வாகம் இடம் வாங்கும் முயற்சியில் இறங்கியுள்ளது.