Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

தாமதமாகும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: குப்பை மேடாகிறது காவிரி ஆறு!

Print PDF

தினமணி             11.11.2010

தாமதமாகும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்: குப்பை மேடாகிறது காவிரி ஆறு!

ஈரோடு : திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் காவிரி ஆறு குப்பை மேடாக மாறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் சேரும் குப்பையை நகராட்சி நிர்வாகம், வைராபாளையம் மயானம் அருகே காவிரிக் கரையில் கடந்த 20 ஆண்டுகளாக கொட்டி வருகிறது. குப்பைக் கிடங்கு நிரம்பி வழியும் நிலையில், அதன்மீது மேலும் குப்பை கொட்ட முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது, காவிரியாற்றின் இடது கரையை ஆக்கிரமித்து குப்பை கொட்டப்படுகிறது .

வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதியில் தனியார் மருத்துவமனைகள் அதிகம் உள்ளதால், குப்பையில் அதிக அளவு மருத்துவக் கழிவு சேர்கிறது. மழைக் காலங்களில் குப்பையுடன் சேரும் மழை நீர், காவிரியில் கலந்து, பெரிதும் மாசடைகிறது. இதன் அருகே வீரப்பன்சத்திரம் நகராட்சிப் பகுதிக்கு குடிநீர் உறிஞ்சு கிணறும், நீரேற்று நிலையமும் அமைந்துள்ளன. தற்போது சாய ஆலைகளுக்கு இணையாக காவிரி ஆற்றில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது.

நகராட்சி நிர்வாகம் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தைச் செயல்படுத்த, வைராபாளையத்தில், காவிரிக் கரையோரம், 7.89 ஏக்கர் நிலத்தை ரூ 26 லட்சம் செலவில் கடந்த 2008-ல் வாங்கியது. 2008-ம் ஆண்டு இறுதியில், சுமார் ரூ 1.25 கோடி திட்ட மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்துக்கான பணிகளை நகராட்சி நிர்வாகம் துவக்கியது.

இத்திட்டம் செயல்படுத்தவுள்ள இடத்தைச் சுற்றி சுற்றுச்சுவர், அணுகு சாலை ஆகியவை ரூ 59.25 லட்சம் செலவிலும், வைராபாளையம் குடிநீர் நீரேற்று நிலையத்திலிருந்து, குப்பை கொட்டும் இடத்துக்கு எளிதாகச் செல்ல, குறுக்கே செல்லும் ஓடையின் மீது ரூ 45 லட்சம் செலவில் பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டது.

பணிகள் துவங்கி இரண்டு ஆண்டுகளாகியும், சுற்றுச்சுவர் பணி கூட முழுமை பெறவில்லை. பாலம் கட்டும் பணியும் பாதியில் நிற்கிறது. நகராட்சி நிர்வாகம் தினமும் காவிரியாற்றில் குப்பை கொட்டுவதால், ஆற்றின் பெரும் பகுதியை குப்பை ஆக்கிரமித்துள்ளது. ஆற்றில் தண்ணீர் செல்வதைத் தடுப்பவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், நகராட்சி நிர்வாகமே தொடர்ந்து ஆற்றை ஆக்கிரமித்து, குப்பையைக் கொட்டி மாசுபடுத்தி வருகிறது என்ற புகார் உள்ளது. குப்பையை ஆற்றில் கொட்டுவதற்குப் பதில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்த வாங்கியுள்ள இடத்தில் கொட்ட நகராட்சி நிர்வாகம் முன்வர வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை. நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?

 

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலர் குப்பை தொட்டிகள்

Print PDF

தினமலர்                10.11.2010

திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்த பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலர் குப்பை தொட்டிகள்

ராமேஸ்வரம் : மாணவர்களுக்கு திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலரிலான குப்பை தொட்டிகள் வைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பாலிதீன் தவிர்ப்பு, மழை நீர் சேகரிப்பு, மரம் நடுதல், கடலோர தூய்மைப் பணி போன்ற திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது. திடக்கழிவு மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, பள்ளிகளில் பச்சை, சிவப்பு கலர் குப்பை தொட்டிகள் வைப்பதற்கு, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். பள்ளிகளில் அன்றாடம் மாணவர்களால் போடப்படும் காகிதம், துணி போன்ற மக்கும் தன்மையுடைய குப்பைகளை பச்சை கலர் தொட்டியிலும், மக்காத பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை சிவப்பு கலர் தொட்டியிலும் போடும் வகையில், குப்பைத் தொட்டிகள் வைக்க பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் அனைவருக்கும் கல்வி இயக்க முதன்மை கல்வி அதிகாரி போஸ் கூறியதாவது: மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் 1,284 பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள நிதியில் இருந்து, குப்பைத் தொட்டிகள் வாங்கப்படும். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பது குறித்து ஏற்கனவே மாணவர்களுக்கு கூறப்பட்டுள்ளது. தற்போது திடக்கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளை தொடர்ந்து, மாவட்டத்திலுள்ள 182 தனியார் பள்ளிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு போஸ் கூறினார்.

 

பொள்ளாச்சி நகராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு "விறுவிறு'

Print PDF

தினமலர்                   06.11.2010

பொள்ளாச்சி நகராட்சியில் இயற்கை உரம் தயாரிப்பு "விறுவிறு'

பொள்ளாச்சி:பொள்ளாச்சி நகராட்சியில் சேகரமாகும் குப்பையை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது. ஒரு டன் குப்பையில் இருந்து 60 சதவீதம் இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பை நல்லூர் அருகிலுள்ள நகராட்சி குப்பைக்கிடங்கில் தேக்கப்படுகிறது. பல ஏக்கர் பரப்பில் தேங்கியுள்ள குப்பை பராமரிப்பு இல்லாமல் வீணாகி வந்தது.இந்நிலையில், குப்பை கிடங்கில் தேக்கப்படும் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும், விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டது. இயற்கை உரம் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் விடப்பட்டுள்ளது.மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரிக்கவும், மக்கும் குப்பையில் சிறிய குப்பையை தனியாக பிரிக்கவும் இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனியார் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:பொள்ளாச்சி நகராட்சி குப்பை கிடங்கு 18 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ளது. அதில், ஐந்து ஏக்கர் பரப்பில் குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு 20 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சுமார் 15 கோடி ரூபாய் செலவில் செட் மற்றும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளது.நகராட்சி லாரிகள் மூலம் கொண்டு வரப்படும் குப்பையில் மக்கும் குப்பை தனியாக பிரிக்கப்படுகிறது. அதை கன்வேயர் மூலம் மிஷின் உள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்படுகிறது. இயந்திரத்தின் உள்பகுதியில் குப்பை சுழற்றப்பட்டு, 120 மில்லிமீட்டர் அளவுள்ள குப்பைகள் தனியாக பிரிக்கப்படுகிறது.

அதில், 120 மில்லிமீட்டர் அளவை விட பெரிதாக உள்ள குப்பைகள் தனியாக கழிக்கப்படுகிறது. ஜலிக்கப்பட்ட குப்பையை திறந்த வெளியில் கொட்டி சுத்தகரிக்கப்படுகிறது. அதன்பின், 45 நாட்களுக்கு குப்பை மக்க வைக்கப்படுகிறது.மக்கிய குப்பையில் பிளாஸ்டிக் மற்றும் பாட்டில் கழிவுகள் நீக்கி மறுபடியும் சுழற்சி முறையில் இயந்திர ஜல்லடை கொண்டு ஜலிக்கப்படுகிறது. அதில், நான்கு மில்லி மீட்டருக்கு கீழுள்ள குப்பை இயற்கை உரமாக தனியாக வந்து விடும். மீதமுள்ள குப்பை கழிவு செய்யப்படும்.

இந்த முறையில் உற்பத்தி செய்யப்படும் இயற்கை உரம் ஒரு டன் மூவாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தேவைக்கு ஏற்ப 10, 25 கிலோ பேக்கிங் செய்தும் விற்கப்படுகிறது. விவசாயிகள் வாகனங்கள் கொண்டு வந்தால் டன் கணக்கில் அப்படியே விற்கப்படுகிறது.பொள்ளாச்சி நகராட்சியில் இருந்து தினமும் சராசரியாக 50 டன் குப்பை கிடைக்கிறது. அதில், 60 சதவீத குப்பை இயற்கை உரம் தயாரிக்க உகந்ததாக உள்ளது. அதிலிருந்து 20 சதவீதம் இயற்கை உரமாக கிடைக்கிறது. இயற்கை உரம் தயாரிக்க ஐந்து ஏக்கர் பரப்பில் 15 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது.சாக்கடை கழிவுகள், அழுகிய காய்கறிகள், பொருட்களில் இருந்து இயற்கை உரம் தயாரிப்பதால் விவசாயத்திற்கு சிறந்த தொழு உரமாக இருக்கும். இயற்கை உரம் தயாரித்து விற்கபட்டாலும் முறையாக துவக்க விழா நடத்தவில்லை. விரைவில் அதிகாரபூர்வ அறிவிப்புடன் குப்பையில் இருந்து இயற்கை உரம் தயாரித்து விவசாயிகளுக்கு விற்பனை செய்யப்படும்.

இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.நகராட்சி சுகாதார அதிகாரிகள் கூறுகையில், "பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகளில் இருந்து தினமும் 55 முதல் 60 டன் குப்பை கிடைக்கிறது. குப்பையில் இருந்து உரம் தயாரிக்கும் நிறுவனத்தார் ஒரு டன் குப்பைக்கு 25 ரூபாய் கட்டணம் செலுத்துகிறார்கள். நகராட்சி நிர்வாகத்திடம் செய்து கொண்ட ஒப்பந்தப்படி 20 ஆண்டுக்கு பிறகு இந்த தொழிற்சாலையை இயந்திரத்துடன் நகராட்சியிடம் ஒப்படைக்க வேண்டும். அதுவரை ஏக்கருக்கு 500 ரூபாய் வீதம் ஆண்டுக்கு 2,500 ரூபாய் வாடகை செலுத்த வேண்டும்' என்றனர்.

 


Page 38 of 66