தினமலர் 04.11.2010
திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதுகை நகர்பகுதியை பராமரிக்க முடிவு
புதுக்கோட்டை: திடக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் புதுகை நகர் பகுதியை பராமரிக்க முடிவு செய்திருப்பதாக புதுக்கோட்டை நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதுஐக நகராட்சி நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை நகராட்சிப் பகுதிகளில் சுகாதார சீர்கேடுகளிலிருந்து மக்களை பாதுகாக்கும் விதமாக திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் மூலம் நகர்ப்பகுதிகளை பராமரிப்பதென நகராட்சி நிர்வாகம் முடிவுசெய்துள்ளது. எனவே, நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் டீ ஸ்டால்கள், டிபன் சென்டர்கள், ஹோட்டல்கள், உணவு விடுதிகள், கடைகள், வணிக வளாகங்கள் நடத்திவருவோர், இதன்மூலம் சேகரிக்கப்படும் திடக்கழிவுகளை பொது இடங்களில் கொட்டுவதை தவிர்க்கவேண்டும். அவற்றை மக்கும் குப்பை, மக்காத குப்பை, மறுசுழற்சிக்கான குப்பை என தரம்பிரித்து தனித்தனியே கூடைகளில் போட்டு வைக்கவேண்டும். இவ்வாறு வைக்கப்படும் குப்பைகள் மற்றும் கழிவுகளை நகராட்சிப் பணியாளர்கள் நேரடியாக வந்து சேகரித்து செல்வர். இதையும் மீறி குப்பைகள் மற்றும் கழிவுகளை பொது இடங்கள், சாலையோரங்கள் மற்றும் வீதிகளில் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அந்த பகுதிகளிலிருந்து குப்பைகளை அப்புறப்படுத்துவதற்கான செலவினை தொடர்புடையவர்களிடமிருந்து வசூல் செய்யப்படும். நகர்ப்பகுதிகளை சுகாதாரமாக வைத்துக்கொள்ள நகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.