Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்துக்கு காப்புரிமை

Print PDF

தினமணி 09.09.2010

குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் இயந்திரத்துக்கு காப்புரிமை

புதுச்சேரி அரசூர் பகுதியில் உள்ள அரசின் பாசிக் தோட்டக்கலைப் பண்ணையில் உள்ள குப்பையை எருவாக்கும் இயந்திரம்.

புதுச்சேரி, செப். 8: புதுச்சேரி அரசின் பாசிக் நிறுவனம் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் பணியைச் செய்து வருகிறது. இதற்காகக் குறைந்த செலவில் வடிவமைக்கப்பட்ட இயந்திரத்துக்குக் காப்புரிமை கிடைத்துள்ளது.

நகரப் பகுதி கழிவுகளை மேலாண்மை செய்வது என்பது சிரமமான விஷயம்.

நகரப் பகுதியில் உருவாகும் குப்பைகளைப் பிரித்தெடுத்து அதை உரமாகவும் மற்றும் பிற பயன்பாட்டுக்கும் மாற்ற வேண்டிய நிலை இருக்கிறது.

புதுச்சேரியில் தினந்தோறும் 350 டன் குப்பைகள் உருவாகின்றன. இதைக் கருத்தில் கொண்டு பாசிக் நிறுவனம் நகரக் கழிவுகளிலிருந்து ஊட்டமேற்றிய கம்போஸ்ட் உரம் தயாரித்துக் கொடுத்து வருகிறது.

இந்த உரத்துக்கு புதுச்சேரி அரசு 75 சதவீதம் மானியமும் அளித்து வருகிறது. இதற்காக இயந்திரங்களை வாங்குவதாக இருந்தாலும் 1 கோடி அளவில் செலவிட வேண்டும் என்ற நிலையில் உள்ளூரிலேயே தயார் செய்தால் குறைந்த செலவாக முடியும் என்று பாசிக் நிறுவனத்தைச் சேர்ந்த 2 அதிகாரிகள் எடுத்த முயற்சிக்கு இப்போது அங்கீகாரம் கிடைத்துள்ளது.

பாசிக் முன்னாள் மேலாண் இயக்குநர் பி. வேணுகோபால், நுண்ணுயிரியாளர் டாக்டர் ஆர். தயாளன் ஆகியோர் இதற்காக வடிவமைத்துள்ளனர்.

இப்போது இவர்கள் வடிவமைத்த இயந்திரத்துக்குப் பாராட்டும் காப்புரிமையும் கிடைத்துள்ளது. இந்த இயந்திரத்துக்கு "இரட்டை ரோட்டரி இயந்திரம்' என்று பெயர்.

இது குறித்து இந்த இயந்திரத்தை வடிவமைத்தவர்களில் ஒருவரான தயாளன் தினமணி நிருபரிடம் கூறுகையில், "அரசு பணமாக இருந்தாலும் 1 கோடி செலவிட்டு இயந்திரம் வாங்க முடியாது. குறைந்த செலவில் இயந்திரத்தை நாமே வடிவமைத்தால் என்ன என்ற யோசனை காரணமாக 25 லட்சத்துக்குள் எங்களால் இதை வடிவமைக்க முடிந்தது. இப்போது காப்புரிமையும் கிடைத்துள்ளது என்றார்.

மேலும் இவர்கள் வடிவமைத்த இயந்திரத்தின் மாதிரியை பயன்படுத்த நகரக் கழிவுகளிலிருந்து கம்போஸ்ட் உரம் தயாரிக்கும் மற்ற மையங்களுக்கு மத்திய அரசின் நகரப்புற மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

குப்பை கிடைப்பதில் சிரமம்

இந்த இயந்திரம் ஒரு நாளைக்கு 75 முதல் 100 டன் குப்பையைச் சலித்து உரமாக மாற்றம் திறன் கொண்டது. அரசூர் பகுதியில் இந்த இயந்திரம் நிறுவப்பட்டு உரம் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இப்போது அப்பகுதி மக்கள் தங்கள் பகுதிக்குக் குப்பையை எடுத்து வரக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து வருவதால் இந்த நிறுவனத்துக்குக் குப்பை கிடைப்பது சிரமமாக இருக்கிறது.

இருப்பினும் இப்போது அங்குள்ள குப்பை ஓராண்டுக்கு பணி செய்யும் அளவுக்கு இருக்கிறது. இந்த நிறுவனம் ஓராண்டுக்கு 2500 முதல் 3000 டன் அளவுக்கு ஊட்டமேற்றிய கம்போஸ்ட் உரம் தயாரித்து வருகிறது.

நாற்றம் எடுக்காமல் இருக்க மக்கிய குப்பைதான் நல்லது. குறைந்தது 45 நாள்கள் குப்பை மக்கியிருக்க வேண்டும். அப்போதுதான் அதை கம்போஸ்ட் உரமாக மாற்ற முடியும். குப்பையை அப்படியே கொட்டி வைத்தால் நாற்றம் எடுக்கும்.வாரத்துக்கு ஒருமுறை அதைப் புரட்டிப் போட்டால் நாற்றம் எடுக்காது என்றார் தயாளன்.

 

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மண்புழு உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு ரூ.7லட்சத்தில் ஷெட் தயாராகிறது

Print PDF

தினகரன் 09.09.2010

ராமையன்பட்டி குப்பை கிடங்கில் மண்புழு உரம் தயாரிக்க மாநகராட்சி முடிவு ரூ.7லட்சத்தில் ஷெட் தயாராகிறது

நெல்லை மாநகராட்சிக்குட்பட்ட ராமையன்பட்டி குப்பைக் கிடங்கில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் மண்புழு உரம் தயாரிப்பதற்கான ஆலோசனைக்கூட்டம் நேற்று நடந்தது.

நெல்லை, செப். 9: ராமையன்பட்டி குப்பைகிடங்கில் மண் புழு உரம் தயாரிக்க நெல்லை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக சுய உதவிக்குழு பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

சமீபகாலமாக நெல்லை மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை கொட்டுவது நெல்லை மாநகராட்சிக்கு பெரும் பிரச்னையாக மாறி வருகிறது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் ராமையன்பட்டி குப்பை கிடங்கில் தீ பிடித்து அப்பகுதியே புகை மண்டலமானது. இதைய டுத்து மாநகராட்சி குப்பை கள் சீவலப்பேரி சாலையில் போடப்பட்டு வந்தன. அங்கு வனத்துறை ஆட்சேபனை தெரிவித்ததால், சிக்கல் ஏற்பட்டது.

நெல்லை, தச்சை மண் டல குப்பைகள் தற்போது பேட்டையில் கொட்டப்பட்டு வருகின்றன. அங்கும் கடந்த இரு தினங்களாக குப்பைகள் தீப்பற்றி எரிகின்றன. இதனால் நெல்லை மாநகராட்சிக்கு குப்பை பிரச்னை பெரும் தலைவலியாக மாற துவங்கியுள்ளது. குப்பையை உரமாக்கும் திட்டத்தை அவசியம் துவக்க வேண்டிய நிலையில் மாநகராட்சி உள்ளது. மாநகராட்சி கமிஷனர் சுப்பையன் தலைமையிலான அதிகாரிகள் செய்த ஆய்வில் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்க ராமையன்பட்டி குப்பை கிடங்கில் போதிய வசதிகள் இருப்பது தெரியவந்தது.

அதன் அடிப்படையில் பொன்விழா ஆண்டு நகர்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு மண்புழு உரம் தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதன்படி ஒரு குழுவுக்கு 5 பேர் வீதம் 10 குழுக்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 50 ஆண்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மண்புழு உரம் தயாரித்தல், நர்சரி பண்ணை அமைத்தல் குறித்து கிள்ளிகுளம் வேளாண் கல்லூரி பயிற்சியாளர்கள் மூலம் பயிற்சி விரைவில் அளிக்கப்படும்.

இத்திட்டத்திற்கான முன்னேற்பாடு கூட்டம் நேற்று ராமையன்பட்டி குப்பை கிடங்கில் நடந்தது. மாநகராட்சி சமுதாய முன்னேற்ற அலுவலர்கள் சுந்தரி, கலாவதி ஆகியோர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த பெண்களுக்கு திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து விளக்கினர். மட்காத குப்பை களை நேரடியாக தாழையூத்து இந்தியா சிமெண்ட்ஸ்க்கு அனுப்பி வைக்கவும், மட்கும் குப்பைகளை ராமையன்பட்டி குப்பை கிடங்கில் சுய உதவிக்குழுக்கள் மூலம் மண் புழு உரமாக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக குப்பை கிடங் கின் முகப்பு பகுதியில் ரூ. 7லட்சம் செலவில் ஷெட் அமைக்கும் பணிகளும் விரைவில் துவங்கும். இங்கு தயாரிக்கப்படும் இயற்கை உரங்களை அப்பகுதியை சேர்ந்த விவசாயிகளுக்கு விற்பனை செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளது. நர்சரி பண்ணையில் மரக்கன்று களை பராமரித்து, அவற்றை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் தெருக்களில் நடவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Last Updated on Thursday, 09 September 2010 10:18
 

திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி மந்தம்

Print PDF

தினமலர் 07.09.2010

திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணி மந்தம்

சேலம்: சேலத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்ட கட்டுமான பணிகள் மந்தமாகியுள்ளது. அதனால் திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.மொத்தம் 95 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்த சேலம் மாநகராட்சி, 8 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்டுள்ளது. கிழக்கில் உடையாபட்டி வரையும், மேற்கில் கொண்டலாம்பட்டி, வடக்கே குரங்குசாவடியும், தெற்கில் சீலநாயக்கன்பட்டி மற்றும் கந்தம்பட்டி, கோரிமேடு மற்றும் அஸ்த்தம்பட்டி ஆகியவை மாநகராட்சி எல்லைகளாக உள்ளன. மாநகர பகுதியில் நாளுக்கு நாள் மக்கள் தொகை அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

சேலத்தில் பொது மக்களிடம் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் நாள் ஒன்றுக்கு 600 மெட்ரிக் டன் கழிவுகளும், திருமணிமுத்தாறு மற்றும் அதன் சாக்கடை கால்வாய்களில் தூர்வாரும் போது கிடைக்கும் கழிவுகளையும் சேர்த்து சுமார் 650 மெட்ரிக் டன் முதல் 700 மெட்ரிக் டன் வரை கழிவுகள் பெறப்படுகிறது. இந்த கழிவுகளை மாநராட்சி நிர்வாகம் மாநகரின் எல்லையில் காலியாக இருந்த அரசு புறம்போக்கு இடங்களான மணியனூர், எருமாப்பாளையம், சூரமங்கலம், விராணம் மற்றம் பள்ளபட்டி ஏரி ஆகிய பகுதிகளில் கொட்டியது. மக்கள் தொகை பெருக்கம், மாநகர வளர்ச்சி காரணமாக, இப்பகுதிகள் தற்போது மக்கள் வசிக்கும் முக்கிய இடங்களாக மாறியுள்ளன.சேலத்தில் பெறப்படும் கழிவுகளில் 60 சதவீததுக்கும் மேல் எருமாப்பாளையம் குப்பைமேட்டில் கொட்டப்படுகிறது. இதனால் இங்குள்ள களரம்பட்டி, கிச்சிபாளையம், கருங்கல்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் நிலத்தடிநீர், காற்று மற்றும் ஏரி மாசுபட்டு சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகிறது. இப்பிரச்னையை போக்க சேலம் மாநகராட்சி கடந்த 2008ம் ஆண்டு ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மைக்கு சுமார் 8 கோடியில் திட்டம் தயாரித்து, 2009ம் ஆண்டு ஃபிப்ரவரி மாதம், சேலம் செட்டிச்சாவடியில் 100 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி கட்டுமான பணிகள் துவங்கியது. இப்பகுதி பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி பணிகள் நடந்தது.கட்டுமான பணிகளின் ஒருபகுதியாக, குப்பைகளை கொண்டுவரும் வாகனங்களுக்காக தார் ரோடுகள் போட்டுள்ளனர். கடந்த மாதம் தமிழக முதல்வர் வரும் வரை, இப்பணிகள் வேக வேகமாக செய்யப்பட்டு 80 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. தற்போது இப்பணி மந்தமாகியுள்ளதால், திட்டத்தை செயல்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. குப்பை மேடுகள் அமைந்துள்ள பகுதியில் வசித்து வரும் மக்கள், திட்டப்பணி விரைவாக முடிக்காவிட்டால், கட்சி பாகுபாடின்றி போராட்டங்கள் நடத்தப்போவதாக எச்சரித்துள்ளனர்.

 


Page 43 of 66