Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

பெருங்குடி வளாகத்தில் குப்பையில் இருந்து செங்கல் தயாரிக்க ரூ69 கோடியில் திட்டம்

Print PDF

தினகரன் 27.07.2010

பெருங்குடி வளாகத்தில் குப்பையில் இருந்து செங்கல் தயாரிக்க ரூ69 கோடியில் திட்டம்

சென்னை, ஜூலை 27: பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ரூ69.5 கோடி செலவில் குப்பையில் இருந்து உரம், செங்கல் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டினார்.

மாநகராட்சி சார்பில் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. ஆணையர் ராஜேஷ் லக்கானி விழாவுக்கு தலைமை தாங்கினார். மேயர் மா.சுப்பிரமணியன் அடிக்கல் நாட்டி பேசியதாவது:

பெருங்குடியில் 125 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் தினமும் தென்சென்னை பகுதியில் சேரிக்கப்படும் 1,500 டன் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. சுமார் 35 வருடங்களுக்கு முன் பெருங்குடியில் குப்பை கொட்ட ஆரம்பிக்கும்போது இந்த பகுதியில் குடியிருப்புகள் இல்லை. இப்போது பெருங்குடி பகுதி, குடியிருப்பு நிறைந்த பகுதியாக வளர்ச்சியடைந்துள்ளது.

பெருங்குடியில் மட்டும் இன்றைக்கு 95 லட்சம் டன் குப்பை தேங்கிக் கிடக்கிறது. இதனால் பெருங்குடி, வேளச்சேரி, தரமணி பகுதிகளில் சுகாதார பாதிப்புகள் ஏற்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து இங்குள்ள குப்பையை அறிவியல் ரீதியில் கையாள மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

அதன்படி 30 ஏக்கர் நிலத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த, ரூ69.5

கோடியில் குப்பையை மறுசுழற்சி செய்வதற்கான தொழிற்சாலைகள் கட்டப்படும். இந்த பணி 12 மாதத்தில் முடிவடையும். பின்னர் குப்பையில் இருந்து உரமும், பிரித்தெடுக்கப்பட்ட கற்கூளங்களில் இருந்து செங்கற்களும், எரியக்கூடிய பொருட்களில் இருந்து எரிகட்டிகளும் தயாரிக்கப்படும்.

பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் தொழிற்சாலை செயல்பட துவங்கிய பிறகு குப்பையே இல்லாத நிலை உருவாகும். அத்துடன் பெருங்குடி, அதன் சுற்றுப்பகுதியில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவதுடன், சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படும்.

விஞ்ஞான முறையில் பிரித்தெடுக்கும் பணி நடைபெறுவதால் துர்நாற்றம், ஈக்கள் இருக்காது. மீதமுள்ள 95 ஏக்கரில் பசுமை பூங்கா அமைக்கப்படும். வடசென்னை பகுதி கொடுங்கையூரில் உள்ள குப்பை கொட்டும் வளாகத்தில் ஒரு சில மாதங்களில் இந்த பணி துவங்கும். இவ்வாறு மேயர் பேசினார்.

தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.ஆர்.ராஜா, துணை மேயர் சத்யபாமா, மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம், எதிர்க்கட்சி தலைவர் சைதை ரவி, கவுன்சிலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குப்பை மூலம் ரூ75 லட்சம் மாநகராட்சிக்கு வருமானம்

மேயர் கூறுகையில், "பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் 30 ஏக்கர் நிலத்தை பயன்படுத்த ஹைட்ரோஏர் டெக்டானிக்ஸ்என்ற நிறுவனத்துக்கு மாநகராட்சி கொடுத்துள்ளது. இந்த நிறுவனம் ஒரு ஆண்டில் தொழிற்சாலைகளை கட்டி முடித்து, குப்பையை மறுசுழற்சி செய்யும் பணியை துவக்கும். தினமும் 1,400 டன் குப்பையை இந்நிறுவனத்துக்கு மாநகராட்சி வழங்கும். ஒரு டன் குப்பைக்கு 15 ரூபாயை இந்நிறுவனம் வழங்கும். இதன்மூலம் ஆண்டுக்கு ரூ75 லட்சம் வருமானம் மாநகராட்சிக்கு கிடைக்கும். 20 ஆண்டுகள் மட்டுமே இந்நிறுவனம் இந்த பணியை செய்யும். பின்னர் ஒப்பந்தகாலம் முடிவடைந்து, மாநகராட்சியிடமே தொழிற்சாலையை ஒப்படைத்து விடும்" என்றார்.

 

சேலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூர் : முதல்வர் கையால் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு

Print PDF

தினமலர்    21.07.2010

சேலம் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூர் : முதல்வர் கையால் திறப்பு விழாவுக்கு ஏற்பாடு

சேலம்: சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்ட பணியை ஆகஸ்ட் 20க்குள் முடித்து, தமிழக முதல்வர் கையால் திறப்பு விழா காண்பதற்கான நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது.சேலம் மாநகராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக மாற்ற திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. 2009 ஃபிப்ரவரியில் தகுதியின் அடிப்படையில் குஜராத் என்விரோமென்ட் புரடெக்சன் இன்பராஸ்டிரக்சர் லிமிடெட், சூரத் என்று நிறுவனத்துக்கு பணி ஆணை வழங்கப்பட்டது.

மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட செயலாக்க பகுதியான செட்டிசாவடிக்கு செல்லும் சாலையானது குண்டும், குழியுமாக சீரழிந்து காணப்பட்டது. தவிர, பல பகுதிகள் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருந்தது. கட்டுமான பொருட்கள் மற்றும் குப்பைகளை எடுத்து செல்வதற்காக இந்த சாலை புதுப்பிக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக மாநகராட்சி எல்லை முதல் திடக்கழிவு செயலாக்க பகுதி வரை இரண்டு கி.மீ., நீளத்துக்கு சாலை அபிவிருத்தி பணி மேற்கொள்ளப்பட்டது.இரண்டாவது கட்டமாக கோரிமேடு முதல் கோம்பைபட்டி வரையில் 1.35 கி.மீ., நீளத்துக்கு சாலை அகலப்படுத்தி அபிவிருத்தி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது கோம்பைபட்டி முதல் குண்டத்துமேடு வரை ஆயிரத்து 825 மீட்டர் சாலையை அகலப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது."ஆன்லைன்' காமிரா வசதி மூலம் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் செயலாக்கத்தை மாநகராட்சியின் மைய அலுவலகத்தில் இருந்தே பார்வையிடும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆசிய அளவில் முற்றிலும் நவீன முறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டப்பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.

சாலை வசதி மற்றும் உள்கட்டமைப்பில் சொற்ப அளவிலான பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளது. தமிழக முதல்வர் கருணாநிதி ஆகஸ்ட் 20 ம் தேதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, புதிய கலெக்டர் அலுவலகம் உள்ளிட்டவற்றை திறந்து வைக்கிறார்.தவிர, துறை வாரியாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். சேலம் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைக்க வேண்டும் என்று மாநகராட்சி மேயர், கவுன்சிலர்கள் மற்றும் அதிகாரிகள் விரும்புகின்றனர். எனவே, நிலுவையில் உள்ள 10 சதவீத பணிகளை ஆகஸ்ட் 20க்குள் துரிதமாக முடித்து கொடுக்குமாறு கட்டுமான நிறுவனத்திடம் மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். அதன் எதிரொலியாக செட்டிசாவடி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டது. தற்போது திடக்கழிவு மேலாண்மை திட்ட பணிகள் ஜரூராக நடந்து வருகிறது.

Last Updated on Wednesday, 21 July 2010 06:12
 

குளித்தலை திடக்கழிவு மேலாண்மை : திட்டம் குறித்து கர்நாடகா குழு பார்வை

Print PDF

தினமலர்    21.07.2010

குளித்தலை திடக்கழிவு மேலாண்மை : திட்டம் குறித்து கர்நாடகா குழு பார்வை

குளித்தலை: குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை, கர்நாடகாவை சேர்ந்த அலுவலர் குழு நேரில் பார்வையிட்டது.மாநிலத்தில் முன்னோடி திட்டமாக திடக்கழிவு மேலாண்மை திட்டம், குளித்தலை நகராட்சியில் அமல்படுத்தப்பட்டுள்ளது. 10 ஏக்கர் பரப்பளவில் சத்தியமங்கலம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் திடக்கழிவு மேலாண்மை கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன், மக்கா குப்பை பிரித்து எடுத்து பிளாஸ்டிக் பொருளும் விற்பனை செய்யப்படுகிறது.குளித்தலை நகராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை பல பல்கலைக்கழக மாணவர்கள், வெளிநாட்டினர் பார்வையிட்டு, தொழில்நுட்பம் குறித்து அறிந்து செல்கின்றனர்.

கர்நாடகா மாநிலத்தில் இத்திட்டம் செயல்படுத்திட, திட்டத்தின் தொழில்நுட்பம் குறித்து நேரில் தெரிந்துகொள்ள, கர்நாடகாவை சேர்ந்த நகராட்சி கமிஷனர், நகராட்சி தலைவர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கொண்ட 33 பேர் குழு குளித்தலை வந்தது. குழு ஒருங்கிணைப்பாளர் சப்னா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் தொழில்நுட்பம் குறித்து கேட்டறிந்தனர்.குளித்தலை நகராட்சி தலைவர் அமுதவேல், கமிஷனர் தனலட்சுமி ஆகியோர் விளக்கமளித்தனர்.

கர்நாடகா மாநில குழு ஒருங்கிணைப்பாளர் சப்னா கூறியதாவது:கர்நாடகாவில் நகராட்சியில் செயல்படுத்திட, திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து நேரில் பார்வையிட வந்துள்ளோம். இத்திட்டம் மூலம் பல லட்சம் ரூபாய் வருவாய் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. எங்கள் குழுவினர் நாமக்கல், திருச்சி மாவட்டங்களில் உள்ள சில நகராட்சிகளிலும் பார்வையிட்டது. குளித்தலை நகராட்சி திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக உள்ளது. இத்திட்டம் நாடு முழுவதும் செயல்படுத்தினால் நல்ல பயனளிக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.குளித்தலை நகராட்சி சுகாதார பணியாளர்கள், தன்னார்வ பணியாளர்கள் உடனிருந்தனர்.

Last Updated on Wednesday, 21 July 2010 06:13
 


Page 46 of 66