தினமணி 21.05.2010
கட்டடக் கழிவுகளை குளக்கரைகளில் கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து
கோவை, மே 20: குளக்கரைகளில் கட்டடக் கழிவுகளை கொட்டும் வாகனங்களின் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, கோவை மாநகராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
÷ மாநகர சுற்றுச்சூழல் குழுக் கூட்டம், மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாநகராட்சி துணை ஆணையர் வே.சாந்தா முன்னிலை வகித்தார்.
இக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
மாநகராட்சி பகுதியில் இயங்கும் வணிக நிறுவனங்கள் தங்களிடம் இருந்து வெளியாகும் கழிவுகளை தெருக்களிலோ அல்லது சாக்கடைகளிலோ கொட்டக் கூடாது. மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள குப்பைத்தொட்டிகளில் மக்கும்- மக்காத குப்பைகளை தரம் பிரித்து அனுப்ப வேண்டும்.
திருமண மண்டபங்களில் வெளியாகும் கழிவுகளையும் இதேபோல தரம் பிரித்து அனுப்ப வேண்டும். இது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒட்டி சாலையோரங்களில் வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் மரக்கன்றுகளை நடுவதற்கு சம்பந்தப்பட்ட துறைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி கோவை நகரில் பள்ளிகள், சாலையோரங்களில் 6 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்படும். மாநகராட்சி பகுதியில் உள்ள குளக்கரைகளில் கட்டடக் கழிவுகளை கொட்டும் வாகனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.