Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Solid Waste Management

நெல்லையில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாநகராட்சி இந்தியா சிமென்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் : தினமும் 1.4 மெட்ரிக் கழிவுகள் அகற்றம்

Print PDF

தினமலர் 09.02.2010

நெல்லையில் பிளாஸ்டிக்கை ஒழிக்க மாநகராட்சி இந்தியா சிமென்ட்ஸ் புரிந்துணர்வு ஒப்பந்தம் : தினமும் 1.4 மெட்ரிக் கழிவுகள் அகற்றம்

திருநெல்வேலி : பிளாஸ்டிக்கை ஒழிப்பது சம்பந்தமாக நெல்லை மாநகராட்சிக்கும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

நெல்லை மாநகராட்சியில் நாள் தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்தின் எரியுலையில் இட்டு அழிக்க சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தின் படி நெல்லை மாநகராட்சியும், இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது. ஒப்பந்தம் மாநகராட்சி மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் முன்னிலையில் கமிஷனர் பாஸ்கரன், இந்தியா சிமென்ட்ஸ் முதன்மை துணைத்தலைவர் நந்தகுமார் கையெழுத்திட்டனர். இதில் துணைமேயர் முத்துராமலிங்கம், மண்டல தலைவர்கள் சுப.சீத்தாராமன், மைதீன், சுப்பிரமணியன், இந்தியா சிமென்ட்ஸ் முதுநிலை பொதுமேலாளர் முருகேசன், சுகாதார அதிகாரி கலு.சிவலிங்கம், சுகாதார ஆய்வாளர்கள் அரசகுமார், கவுன்சிலர் தியாகராஜன், சுப்பையாபாண்டியன், நகரப் பொறியாளர் ஜெய்சேவியர், செயற்பொறியாளர் நாராயணன் நாயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து மேயர் ஏ.எல்.சுப்பிரமணியன் கூறுகையில், "மாநகராட்சி பகுதிகளில் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளால் நிலத்தடி நீர் மட்டம் பாதிக்கப்படுகிறது. எனவே இதை ஒழிக்க அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தினமும் மாநகராட்சியில் இருந்து 1.4 மெட்ரிக் டன் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பப்படுகிறது என்றார்'.

Last Updated on Tuesday, 09 February 2010 10:17
 

மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக்க மாநகராட்சி - இந்தியா சிமென்ட் நிறுவனம் ஒப்பந்தம்

Print PDF

தினமணி 09.02.2010

மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருளாக்க மாநகராட்சி - இந்தியா சிமென்ட் நிறுவனம் ஒப்பந்தம்

திருநெல்வேலி, பிப். 8: திருநெல்வேலி மாநகராட்சியில் சேகரிக்கப்படும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை இந்தியா சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மாநகராட்சி ஆணையர் கா. பாஸ்கரனும், சிமென்ட் ஆலையின் முதுநிலை துணைத் தலைவர் நந்தகுமாரும் திங்கள்கிழமை கையெழுத்திட்டனர்.

மேயர் அ.லெ. சுப்பிரமணியன், துணை மேயர் கா. முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலையில் கையெழுத்தான இந்த ஒப்பந்தப்படி, அடுத்த 3 ஆண்டுகளுக்கு மாநகராட்சியில் நாள்தோளும் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து பிரித்து எடுக்கப்படும் 1.4 டன் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் இந்தியா சிமென்ட் ஆலைக்கு இலவசமாக அளிக்கப்படும்.

இந்த ஒப்பந்தம் குறித்து மேயர் கூறியதாவது:

இம் மாநகராட்சிப் பகுதியில் சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை தாழையூத்தில் உள்ள இந்தியா சிமென்ட் ஆலைக்கு எரிபொருளாக வழங்க மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான் தலைமையில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதற்கான தீர்மானம் மாநகராட்சியில் கடந்த டிசம்பரில் நிறைவேற்றப்பட்டது. பின்னர், மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்பட்ட மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் சிமென்ட் ஆலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவை சோதனை அடிப்படையில் எரிபொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தன.

இப்போது தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு இந்த பிளாஸ்டிக் கழிவுகளை அந்த ஆலைக்கு வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது. மாநகராட்சிப் பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் இருந்து மக்காத பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி நிர்வாகமே பிரித்து எடுத்து ஆலைக்கு கொண்டு சென்று கொடுக்கும். ஒரு நாளைக்கு சுமார் 1.4 டன் பிளாஸ்டிக் கழிவுகள் இலவசமாகவே அளிக்கப்படும் என்றார் மேயர்.

முதுநிலை துணைத் தலைவர் நந்தகுமார் கூறியதாவது:

எங்கள் ஆலையில் நாளொன்றுக்கு சுமார் 500 டன் நிலக்கரியை எரிபொருளாகப் பயன்படுத்துகிறோம். அதனுடன் சேர்த்து இந்த மக்காத பிளாஸ்டிக் கழிவுகளும் எரிபொருளாகப் பயன்படுத்தப்படும். இதற்காக பல நவீன இயந்திரங்களை நிர்மாணித்துள்ளோம். பிளாஸ்டிக்கை சாதாரணமாக எரிப்பதால் உருவாக்கும் நச்சு வாயுக்கள், ஆலையில் சுமார் 1,400 டிகிரி வெப்பத்தில் எரிக்கப்படுவதால் அவற்றின் மூலக்கூறுகள் சிûதைக்கப்பட்டு காற்றில் எளிதில் கலந்துவிடும். எனவே, சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாது.

இதேபோல், கன்னியாகுமரி நகராட்சி மற்றும் தூத்துக்குடி மாநகராட்சியில் இருந்தும் மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் கொண்டு வரப்பட்டு சோதனை அடிப்படையில் எரிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மாநகராட்சியுடன் மட்டும்தான் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்ப்பட்டுள்ளது என்றார் நந்தகுமார்.

மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் சுப. சீதாராமன், எஸ்.எஸ். மைதீன், பூ. சுப்பிரமணியன், மாமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Last Updated on Tuesday, 09 February 2010 06:46
 

திடக்கழிவு மேலாண்மைக்கு ஒத்துழைப்பு அவசியம் : உள்ளாட்சிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் கருத்து

Print PDF

தினமலர் 03.02.2010

திடக்கழிவு மேலாண்மைக்கு ஒத்துழைப்பு அவசியம் : உள்ளாட்சிகளின் கலந்தாய்வு கூட்டத்தில் கருத்து

குன்னூர் : "ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த பேரூராட்சி, நகராட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம்,' என கலந்தாய்வு கூட்டத்தில் யோசனை தெரிவிக்கப்பட்டது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் உதவியுடன் சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் சார்பில் திடக்கழிவு மேலாண்மை திட்ட செயல்பாடு குறித்த உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் குன்னூர் விவேக் அரங்கில் நடத்தப்பட்டது. சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மைய மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரவடிவேலு வரவேற்றார். குன்னூர் ஊராட்சி ஒன்றிய தலைவி லட்சுமி பேசுகையில், ""குன்னூர் ஊராட்சிப் பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை மேற்கொள்ள பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன; மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்தவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; இருப்பினும், திட்டத்தை உரிய முறையில் செயல்படுத்த முடியவில்லை. பல கிராமங்கள் சுகாதாரமற்ற நிலையில் தான் உள்ளன. குன்னூர் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் குப்பைகளை சேகரிக்க குப்பை வாகனங்கள் தேவைப்படுகின்றன. திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்த பயிற்சிகள் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும்,'' என்றார்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் மதிவாகணன் பேசுகையில், ""கடந்த 2000ம் ஆண்டு மாநில அரசால் அறிமுகப்படுத்த திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை உள்ளாட்சி அமைப்புகளில் நிறைவேற்ற 2003ம் ஆண்டு வரை காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், நீலகிரியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழு அளவில் நடைமுறைக்கு வரவில்லை. ஊராட்சிகளில் இத்திட்டம் முழு அளவில் வெற்றியடைய பேரூராட்சி, நகராட்சிகளின் உதவி அவசியம்,'" என்றார்.

கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்ட தொழில்நுட்ப குழு உறுப்பினர் பொறியாளர் பாஸ்கரன் பேசுகையில், ""ஊராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை அருகேயுள்ள நகராட்சி, பேரூராட்சிகள் மூலம் அப்புறப்படுத்துவன் மூலமே ஊராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் முழு வெற்றி பெறும்,'' என்றார். சி.பி.ஆர்., சுற்றுச்சூழல் கல்வி மையத்தின் இணை இயக்குனர் சுதாகரன் பேசுகையில், "ஊராட்சிகளுக்கு தேவையான குப்பை வண்டி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம் ஊராட்சிகளில் இத்திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும்,'' என்றார். கோவை வேளாண்மை பல்கலைகழக பேராசிரியை சுகந்தி, குப்பைகளை கொண்டு மண்புழு உரம் தயாரிக்கும் விதம் குறித்து விளக்கினார்.கூட்டத்தில், குன்னூர் ஊராட்சி ஒன்றிய பி.டி.., ராஜூ முன்னிலை வகித்தார். பர்லியார் ஊராட்சி தலைவர் கலைச்செல்வன், வண்டிச்சோலை ஊராட்சி தலைவர் சதீஷ்குமார், குன்னூர் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவர் காளிதாஸ் மற்றும் உறுப்பினர்கள், பேரட்டி ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி, மேலூர் ஊராட்சி தலைவர் மணி உட்பட பலர் பங்கேற்றனர். கூட்ட ஏற்பாடுகளை "நெஸ்ட்' அறக்கட்டளையின் நிர்வாகி சிவதாஸ் உட்பட பலர் செய்திருந்தனர்.

ஆர்வம் குறைவால் அதிருப்தி...: உள்ளாட்சி அமைப்புகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக நடத்தப்பட்ட இந்த முக்கியமான கூட்டத்தில் பெரும்பாலான உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் பங்கேற்கவில்லை. காலை 10.00 மணிக்கு கூட்டம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது; வண்டிச்சோலை ஊராட்சி, பர்லியார் ஊராட்சி உட்பட சில ஊராட்சி தலைவர்கள் மட்டும் வந்திருந்தனர். மதியம் 12.00 மணிக்கு மேல் தான் சில உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் வந்தனர். குன்னூர் நகராட்சி சார்பில் மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் எவரும் பங்கெடுக்கவில்லை. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை சோர்வடைய செய்தது.

Last Updated on Wednesday, 03 February 2010 07:47
 


Page 54 of 66