தினமணி 17.12.2009
திடக் கழிவு மேலாண்மை: விழிப்புணர்வு அவசியம்
கோவை, டிச.16: திடக் கழிவு மேலாண்மை குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோவை மத்திய கலால் ஆணையர் சி.ராஜேந்திரன் கூறினார்.
குப்பையில் இருந்து செல்வம் என்ற திட்டத்தை ராக் அமைப்பு துவங்கியது. இத் திட்டத்தின் ஓராண்டு நிறைவு விழா பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இவ் விழாவின் சிறப்பு விருந்தினர் சி.ராஜேந்திரன் பேசியது:
சிங்கப்பூரின் மொத்த பரப்பளவு 600 கி.மீ. அந் நாட்டின் மக்கள்தொகை 35 லட்சம்.
இவ் வளவு குறுகிய இடத்தில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாழ்ந்தாலும் கூட அனைத்து இடங்களையும் சுத்தமாக உள்ளன. பள்ளி பருவத்தில் இருந்தே மாணவ, மாணவியரிடம் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வை அந் நாட்டு அரசு ஏற்படுத்துகிறது.
உற்பத்தியா கும் திடக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்காக ஆண்டுதோறும் ரூ.6 ஆயிரம் கோடிகளை சிங்கப்பூர் அரசு ஒதுக்கீடு செய்கிறது. சுற்றுச் சூழலை எந்தவிதத்திலும் பாதிக்காத வகையில் கழிவுகள் அப்புறப்படுத்தப்படுகின்றன.
இந்தியாவில் திடக் கழிவு மேலாண்மைக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்பட வேண்டும். மேலும், சிங்கப்பூரில் குப்பைகள் கையாளப்படும் நவீன முறைகளை கற்று தெளிந்து, அவற்றை நம் நாட்டிலும் அமலாக்க வேண்டும்.
பொரு ளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போதுதான் வெளியேற்றப்படும் குப்பைகளின் எடையும் அதிகரிக்கிறது. வறுமையில் வாழ்வோரை காட்டிலும் பணக்காரர்கள்தான் அதிக குப்பைகளை வெளியேற்றுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
நம் வீட்டை குப்பைகளின்றி சுத்தமாக வைப்பதுபோல் தெருவையும் குப்பைகளில்லா இடமாக மாற்ற வேண்டும்.
திடக் கழிவு மேலாண்மை குறித்த மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியில் உள்ளாட்சி அமைப்புகள் ஈடுபட வேண்டும் என்றார்.
ராக் அமைப்பு தலைவர் சி.ஆர். சுவாமிநாதன், துணைத் தலைவர் ரவிசெல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.