தினமணி 10.07.2013
160 பகுதிகளுக்கு பிளாஸ்டிக் குப்பைத் தொட்டிகள்: ஆணையர்
திருச்சி மாநகராட்சியில் 160 பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அப்பகுதிகளிலுள்ள அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு பிளாஸ்டிக் குப்பைகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவித்தார் மாநகராட்சி ஆணையர் வே.ப. தண்டபாணி.
திருச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற துப்புரவுப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாமுக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
மக்காத பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளைத் தரம் பிரித்து, மாரியம்மன் கோவில் தெரு, வாமடம், பறவைகள் சாலை, அம்பேத்கர் நகர் ஆகிய இடங்களிலுள்ள உலர் வள மையங்களில் சேகரிக்கப்படுகிறது.
சேகரிக்கப்படும் மக்காத பிளாஸ்டிக் குப்பைகள் விற்பனை செய்யப்பட்டு, அதிகளவில் மக்காத குப்பைகள் சேகரிக்கும் துப்புரவுப் பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும். மக்கும் குப்பைகள் முழுமையாக உரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் சேகரிக்கப்படும் உலர் கழிவுகள் மற்றும் மக்கும் குப்பைகள் தொடக்க நிலையிலேயே பிரிக்கப்பட்டு எடுத்துச் செல்லப்படும், மக்காத குப்பைகளைத் தொடக்க நிலையிலேயே தரம் பிரிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நகர் நல அலுவலர் அல்லி, உதவி ஆணையர்கள் தயாநிதி, தனபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.